நாளை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்: மதுரை வரும் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் அழகர்கள்...!
மதுரை: வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அழகர் மலையில் இருந்து நேற்று மாலை கண்டாங்கி பட்டுடுத்தி பல்லக்கில் கிளம்பினார் சுந்தரராஜ பெருமாள் என்ற அழகர். கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து, கள்ளழகர் வேடமணிந்து மதுரை நோக்கி புறப்பட்ட அழகர், கள்ளந்தரி, அப்பன்திருப்பதி உள்ளிட்ட வழிநெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டபகப் படிகளில் கள்ளழகர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவரை சுமப்பதே பெருமை, பாக்கியம் என்று கருதும் பக்தர்கள், மதுரை நகருக்கு அவரை சுமந்து கொண்டு வருகின்றனர்.
எதிர்கொண்டு அழைத்தனர்.
வைகையில் இறங்குவதற்காக மலைமீது இருந்து இறங்கி வரும் அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்பு கொடுத்தனர். மூன்று மாவடியில் இந்த நிகழ்ச்சி இன்று காலையில் நடைபெற்றது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து கள்ளழகர் வேடமணிந்து வந்துள்ள பக்தர்களும், பொதுமக்களும் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். மாவிலக்கு ஏற்றியும், செம்புக்கிண்ணத்தில் நெய்தீபம் ஏற்றியும் கள்ளழகரை வணங்கினர்.
ஆற்றில் இறங்கும் அழகர்
திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நாளைக் காலை காலை 7.31 மணிக்கு மேல் காலை 7.45 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு திரள்வார்கள். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோடை காலம் என்பதால் அழகரைக் காணவரும் பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர்ப்பந்தல், பாணகம் போன்றவையும் வழங்கப்படும். பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து வெப்பத்தை தணிப்பார்கள்.
மதுரையில் திருத்தேர்
இதனிடையே மீனாட்சி அம்மன் கோவிலின் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. மீனாட்சி சொக்கநாதர் சமேதராக நான்கு மாட வீதிகளில் வலம் வந்த தேரினை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
ஆடி அசைந்து வந்த தேர்
தேரோட்டத்தைக் காண லட்சக் கணக்கில் பக்தர்கள் மாசி வீதிகளில் குவிந்ததால், தேரோட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாசி வீதியைக் கடப்பதற்கு சுமார் 2 மணி நேரம் ஆனது. மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்புக்கு முற்பகல் 11.15 மணி அளவில்தான் தேர் வந்தது. மேலும், இன்று காலை ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாகவும் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டது.
ஆண்டாள் மாலை
இதனிடையே வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கு சூடுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் மாலை கொண்டு செல்லப்பட்டது. ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வர்ண பெட்டியில் ஆண்டாளுக்கு அணிவித்த மாலை, கிளி, வஸ்திரம் போன்றவை மேள தாளம் முழங்க எடுத்துச் செல்லப்பட்டன.
ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள டி.குண்ணத்தூரில் சில மணிநேரங்கள் ஆண்டாள் மாலை அடங்கிய பெட்டி இறக்கிவைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அப்போது பஜனைகள் பாடி மதுரைக்கு மாலையை அனுப்பிவைப்பார்கள்.
மாலையில் மதுரையை சென்றடையும் மாலையை இன்று இரவு தல்லாகுளம் வேங்கடாசல பெருமாள் திருக்கோயிலில் தங்கியுள்ள கள்ளழகருக்கு திருமஞ்சனம் முடிந்த உடன் அணிவிக்கின்றனர். இதனை அணிந்து கொண்டுதான் அழகர் ஆற்றில் இறங்குவது ஐதீகம். ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.