கோடையில் கடுமையாக உயர்ந்த காய்கறிகள் விலை...
சென்னை: கோடையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், காய்கறிகளின் வரத்து கோயம்பேட்டில் குறைந்துள்ளது. எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாததே இதற்கு காரணம்.
வரத்து குறைந்ததால் விலையும் தடாலடியாக உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பீன்ஸ், அவரை நேற்று கிலோ தலா ரூ.40-க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று அதன் விலை ரூ.80 ஆக உயர்ந்ததுள்ளது.
இந்த விலையேற்றத்தின் காரணமாக சில்லரை வியாபாரிகள் கிலோ ரூ 100லிருந்து ரூ110 வரை விற்கிறார்கள். கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் திண்டுக்கல், தேனி, திருச்சி, விராலிமலை பகுதியில் இருந்து லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. சாதாரணமாக 50 லாரிகளில் வரும் பீன்ஸ், அவரை இன்று 10 லாரிகளில் மட்டுமே வந்தது குறிப்பிடத்தக்கது.
காய்கறி வரத்து குறைந்து போனதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பீன்ஸ், அவரைப் போலவே ஏனைய காய்கறிகளும் ஏறக்குறைய விலை உயர்ந்தே காணப்படுகின்றன்.
விதிவிலக்காக பெரிய வெங்காயத்தின் விலை மட்டும் குறைந்துள்ளது. நேற்று கிலோ ரூ40க்கு விற்பனையான பெரிய வெங்காயத்தின் விலை இன்று கிலோ ரூ 10 மட்டுமே.
காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் :
பீன்ஸ் கிலோ ரூ.100, அவரை கிலோ ரூ.100, வெண்டை கிலோ ரூ.30, கேரட் கிலோ ரூ.30, பச்சை மிளகாய் கிலோ ரூ.30, இஞ்சி கிலோ ரூ.85, முட்டை கோஸ் கிலோ ரூ.40, கத்தரிக்காய் கிலோ ரூ.25, தக்காளி கிலோ ரூ.30.