மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென் மேற்கு பருவ காற்று ஆரம்பம்..!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலங்கள் ஆகும். இந்த சமயத்தில் இதமான காற்றும், லேசான சாரலும் வீசும். இதன் சுற்று வட்டார பகுதிகளிலும் குளிர்ச்சியாக இருக்கும். மூலிகை மணம் கலந்த காற்று வீசுவதாலும், அருவிகளில் மூலிகை கலந்த தண்ணீர் விழுவதாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம அதிகமாக இருக்கும்.
இந்தாண்டு செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் சித்திரை மாதம் 10ம் தேதி இந்த பகுதியின் வசந்த காலம் துவங்கி விடும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சில நாட்களாக ஏமாற்றிய காற்று இன்று துவங்கியது. இதனால் காற்றாலைகள் அனைத்தும் சுழல தொடங்கியுள்ளன. இதனால் மின்தடை நேரம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கடந்த சில நாட்களாக வாட்டி வந்த வெயிலின் தாக்கம் இதனால் குறைய தொடங்கியுள்ளது. காற்று தொடர்ந்து வீசினால் இதன் மூலம் சாரல் பெய்ய துவங்கும். கடந்த ஆண்டு சீசன் ஏமாற்றிய நிலையில் இந்தாண்டாவது சீசன் நன்றாக இருக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.