அக்பர் பக்டி கொலை வழக்கில் முஷாரப் கைது
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, 2007ம் ஆண்டில் நீதிபதிகளை சிறை பிடித்த வழக்கு ஆகியவற்றில் கைது செய்யப்பட்டு இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார். பூட்டோ கொலை வழக்கில் கடந்த மாதம் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. நீதிபதிகளை கைது செய்த வழக்கில் நேற்று முன்தினம் தான் ஜாமீன் கிடைத்தது.
இந்நிலையில் 2006ம் ஆண்டு கொல்லப்பட்ட பலுசிஸ்தான் பழங்குடியின தலைவர் அக்பர் பக்டி வழக்கில் முஷாரபை பலுசிஸ்தான் போலீசார் இன்று கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரிய முஷாரப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் அவரை கைது செய்யுமாறு பலுசிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார். அவரை 2 வாரம் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக முஷாரப் அவரது பண்ணை வீட்டில் வைத்தே விசாரிக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். முஷாரப் அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில் பக்டி கொல்லப்பட்டார். இதையடுத்து பலுசிஸ்தானில் போராட்டங்கள் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.