உணவுப் பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்த அவசர சட்டம்- எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!!
டெல்லி: உணவுப் பாதுகாப்பு மசோதாவை நடைமுறைப்படுத்த அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. பார்லிமென்ட்டில் நிலுவையில் உள்ள மசோதாவை விவாதம் இன்றி அவசரம் சட்டம் மூலம் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு ரூ.1 முதல் 3 விலையில் மாதம் 5 கிலோ உணவுப் பொருள் கிடைப்பதை உறுதி செய்வது உணவு பாதுகாப்பு மசோதா. மத்திய அரசு இதற்காக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி செலவிடும். இந்த மசோதா ஏற்கெனவே பார்லிமென்ட்டில் நிலுவையில் உள்ளது.
மேலும் வரும் 26-ந் தேதி பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவும் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு உணவு பாதுகாப்பு மசோதாவை நடைமுறைப்படுத்த அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு ஜனாதிபதி கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்த பின்னர் பார்லிமென்ட்டில் ஒப்புதல் பெற வேண்டும்.
ஆனால் இந்த அவசர சட்டத்துக்கு பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், இந்த அவசரச் சட்டம் கொண்டு வருவது என்பது தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செய்யும் ஏமாற்று வேலை. இது மிகவும் முக்கியமான மசோதா. இதை பார்லிமென்ட்டில் வைத்து விவாதிக்காமல் நிறைவேற்ற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மறைக்கும் வகையிலும், தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கும் இந்த மசோதாவை பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்றார்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோரும் இந்த அவசர சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.