ரூ1000 கோடியில் பெண்களுக்கு தனி வங்கி அமைக்க அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: ரூ1000 கோடி முதலீட்டில் பெண்களுக்கென தனி வங்கி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெண்களுக்கென தனி வங்கி தொடங்கப்படும் என மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஒப்புதல் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டது.
பாரதிய மகிளா வங்கி எனப்படும் இதன் தலைமையகம் டெல்லியில் செயல்படும். இந்த வங்கியில் முதல்கட்டமாக 6 கிளைகள் தொடங்கப்படும். இந்த வங்கிகள் நவம்பர் மாதம் முதல் செயல்படும்.
பெண்களுக்கு நிதி சேவைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி சேவைகள் அளிப்பது ஆகியவற்றுக்காகவே இந்த வங்கி உருவாகிறது. இந்த வங்கிகளில் பெண்கள் மட்டுமே பணிபுரிவர்.
மேலும் நிலம் கையகப்படுத்தும் மசோதா திருத்தங்களுக்கும் மத்திய அரசின் செய்திகளை சமூக வலைதளங்களுக்கு கொண்டு செல்வதற்காக புதிய ஊடக பிரிவு தொடங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.