மானாமதுரை டிஎஸ்பி வெள்ளத்துரையை டிரான்ஸ்பர் செய்ய முயற்சி: கூட்டணி சேரும் அரசியல்வாதிகள்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி மருதுபாண்டியர் குருபூஜையின் போது பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பாச்சேத்தி எஸ்ஐ ஆல்வின்சுதன் என்ற 27 வயது இளைஞர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கலவரம் நடைபெற்றது.
அந்த சூழ்நிலையில் மானாமதுரைக்கு டிஎஸ்பியாக வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார். ஆல்வின்சுதன் கொலை குற்றவாளிகள் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது சுட்டு கொல்லப்பட்டனர். அதன்பின் மானமதுரையில் கட்டபஞ்சாயத்து , ரியல் எஸ்டேட் மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், போலீசார், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் மீது தயவு தாட்சண்யம் பார்க்காமல் அதிரடி நடவடிக்கை எடுத்தார் வெள்ளதுரை. இதனால் பலரும் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் வெள்ளத்துரையை மாற்ற தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தனர். அதற்கு ஏற்றாற் போல சிறுகுடி ஊராட்சியில் பாப்பாங்குளம் கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி டிஎஸ்பி வெள்ளத்துரையிடம் மனு கொடுக்க சிப்காட் போலீசாருக்கு அதனை அனுப்பி பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டார். ஆனால் சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளியின் கணவர் தங்கராசு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாப்பாங்குளத்தில் தனக்கு ஓட்டு போடாதவர்கள் 36பேரின் வீட்டையும் இடித்து தரைமட்டமாக்கிவிட்டார்.
கீழ் மட்ட போலீசாரும் இந்த தகவலை டிஎஸ்பியிடம் சொல்லவில்லை. பத்திரிக்கையாளர்கள் வீடுகள் இடிக்கப்பட்ட விபரத்தை கேள்விப்பட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் கேட்ட போது தங்கராசுவிற்கு ஓட்டு போடாததால் வீட்டை இடித்தாக தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பூபதி என்ற பெண்மணி கூறும் போது தேர்தலின் போது எங்கள் வீட்டிற்கு தங்கராசு வந்து பணம் கொடுத்து பாலின் மீது சத்தியம் செய்ய சொன்னார் நான், எனது மகள் உள்ளிட்டோர் சத்தியம் செய்தோம். ஆனால் எனது கணவர் உள்ளிட்ட உறவினர்கள் சத்தியம் செய்ய மறுத்துவிட்டனர். அதனை மனதில் வைத்து வீட்டில் சோறாக்கி கொண்டிருந்த போது மிஷினை வைத்து வீட்டை இடித்துவிட்டார். தட்டி கேட்ட எங்களை அடியாட்கள் வைத்து மிரட்டினார் என்றார்.
பத்திரிக்கைகளில் செய்தி வந்த பின் இந்த விவகாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையில் எடுத்து போராட தயாரானது. சென்னை மதுராவயல் தொகுதி எம்எல்ஏ பீம்ராவ் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாப்பாங்குளத்தில் முகாமிட்டு வீடுகளை இடித்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தங்கராசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதை விட்டுவிட்டு டிஎஸ்பியை குற்றம் சாட்ட ஆரம்பித்தனர்.
மார்க்சிஸ்ட்டின் போராட்டத்தை அடுத்து தொகுதி எம்எல்ஏவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குணசேகரனும் தங்கள் பங்குக்கு டிஎஸ்பியை குற்றம் சாட்ட ஆரம்பித்தார். டிஎஸ்பியால் பாதிக்கப்பட்ட சட்டவிரோத கும்பல்கள் அனைத்தும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்து டிஎஸ்பிதான் வீடுகளை இடித்தார் என தகவல்களை பரப்பியது. ஆனால் பாதிக்கப்பட்ட பலரும் தேர்தல் முன்விரோதத்தால் தங்கராசு இடித்தார் என கருத்து சொல்லியும் வேண்டுமென்றே டிஎஸ்பியை இங்கு இருந்து டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என அவதூறு பரப்பி வருவதோடு தமிழக அரசுக்கும் மனு அனுப்பி வருகின்றனர்.
கட்டப்பஞ்சாயத்து செய்து சம்பாதித்து வந்த போலீசாரும் தங்கள் பங்குக்கு எஸ்பியிடம் தவறான தகவல்களை சொல்லி வருகின்றனர். காரணம் திருப்பத்தூரில் போலீசாரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் டிஐஜி யிடம் மனு கொடுக்க அதனை விசாரிக்க வெள்ளத்துரையை உத்தரவிட்டார். அதில் நியாயமாக விசாரித்து நடவடிக்கை எடுத்தால் போலீசாரும் பாதிக்கப்பட்டனர். அது போல வழக்கறிஞர்களின் சிபாரிசுகளை நியாயமான விஷயத்தில் மட்டும் கேட்டார் வெள்ளத்துரை. இதனால் வழக்கறிஞர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். பாப்பாங்குளம் விஷயத்தில் தங்கராசுவிடம் டிஎஸ்பிதான் இடிக்கச் சொன்னார் என வாக்குமூலம் வாங்கியதாக தெரிகிறது.
பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் வாக்குமூலம் தர சொன்ன போது டிஎஸ்பிக்கு எதிராக சொல்ல மறுத்துவிட்டனர். நடந்த சம்பவத்தை மட்டும் சொல்வோம் என சொன்னதால் குற்றவாளியான தங்கராசுவை டிஎஸ்பிக்கு எதிராக திருப்பும் வேலையை செய்து வருகின்றனர் அரசியல்வாதிகள்.
பொதுமக்கள் பலரும் டிஎஸ்பியை மாற்ற கூடாது என போர்க்கொடியை தூக்கியுள்ள நிலையில் அரசியல்வாதிகள் பலரும் டிஎஸ்பியை மாற்ற கங்கணம் கட்டி வேலைசெய்து வருகின்றனர். வரும் தேவர் குருபூஜை வரை டிஎஸ்பி மானாமதுரையில் பணியாற்றினால் மட்டுமே சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கும், இல்லையென்றால் மீண்டும் சமூகவிரோதிகள் ஆட்டம் போட தொடங்கி விடுவார்கள் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறிவருகின்றனர்.