ஆபரேசன் மலை தொடக்கம்.. ‘கும்கி’யுடன் வனத்துறை அதிகாரிகள் தயார்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் 6 காட்டுயானைகளை பிடிக்க ஆபரேசன்மலை இன்று துவங்குகிறது. இவைகளை பிடிக்க கும்கி யானைகள் தயார் நிலையில் உள்ளன.
விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதமாக அட்டகாசம் செய்து வந்த குட்டி உள்ளிட்ட ஆறு காட்டுயானைகளை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்யப்பட்டது. 100 பேர் கொண்ட குழுவினர் இந்த ஆபரேசனில் ஈடுபடுகின்றனர்.
ஆபரேசன் மலை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்காக 5 கும்கிகளுடன் 20க்கும் மேற்பட்ட பாகன்கள், கால்நடை மருத்துவ குழு கடந்த 4 நாட்கள் முன்பு அப்பகுதிகளுக்கு விரைந்தனர்.
மின் விநியோகம் நிறுத்தம்
மேல்செங்கத்தில் இருந்து தண்டராம்பட்டு பகுதி வரை இந்த ஆபரேசன் மலை நடக்கிறது. இதையடுத்து யானைகள் சுற்றித்திரியும் பகுதியில் பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. மின்விநியோகமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஆபரேசன் மலை நடைபெறும் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி கல்யாண சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கூண்டுகளில் அடைக்கத் திட்டம்
மயக்க ஊசி மூலம் யானைகளை பிடிக்க முயற்சி நடக்கிறது. பிடித்து வரப்படும் 6 காட்டுயானைகளில், 3 முதுமலை பாம்பேக்சிலும், 3 யானைகள் டாப்சிலிப்பிலும் கிரால் மரக்கூண்டு வைத்து பழக்க வைக்கப்பட உள்ளன. பின்னர் மற்ற யானைகள் போல் இந்த காட்டுயானைகள் முகாமில் பணிகளை மேற்கொள்ளும்.அதற்காக, முதுமலை பாம்பேக்சில் 3 கிரால் மரக்கூண்டுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
100 யூகலிப்டஸ் மரங்கள்
தலா ஒவ்வொரு கூண்டுக்கும் 100க்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 5 கும்கிகள் மற்றும் பொக்லைன் இயந்திர உதவியுடன் குழி தோண்டி, அதில் 25 அடி நீள யூகலிப்டஸ் மரத்தை ஊன்றி, 18 அடி உயரம் மற்றும் 16 நீள, அகலத்தில், குறுக்கும் நெடுக்குமாக மரங்கள் செருகப்பட்டு கூண்டு அமைக்கப்படுகிறது. இதில் ஒரு கூண்டு பணி நிறைவடைந்துள்ளது. மீதி 2 மரக்கூண்டு அமைக்கும் பணி நடக்கிறது.
முதன் முதலாக
முதுமலையில் கடந்த பல ஆண்டாக கிரால் மரக்கூண்டுகள் அமைத்து, காட்டுயானைகள் பிடித்து பழக்கப்படுத்தும் பணி ஏதும் நடைபெறவில்லை. வனத்தில் இருந்து தாயை பிரிந்து வரும் குட்டிகளே கடந்த சில ஆண்டாக இங்கு பழக்கப்பட்டு வளர்ந்துள்ளன. பல ஆண்டுகள் கழித்தே தற்போது பிடித்து வரப்படும் காட்டு யானைகள் பழக்க வைக்கப்பட உள்ளன என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிகப்பெரிய ஆபரேசன்
காட்டு யானைகளை பிடிக்கும் மிகப்பெரிய ஆபரேசன் முதன்முறையாக இப்போதுதான் நடைபெற உள்ளது. இதனால் யானைகளை பத்திரமாக பிடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.