Operation Lotus: 9+1 எம்எல்ஏக்கள் மிஸ்சிங்.. அதிர்ச்சியில் காங்கிரஸ்.. குமாரசாமி ஆட்சி கவிழ்கிறதா?
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாஜகவின் 'ஆபரேஷன் லோட்டஸ்' அதிரடி காரணமாக ஆளும் கூட்டணிக்குள் பெரும் அமளி துமளி நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், 104 தொகுதிகளை வென்று, தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்த போதிலும், 224 தொகுதிகளை கொண்ட சட்டசபையில், அக்கட்சியால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை.
இந்த நிலையில் திடீரென காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. இதனால், பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தும் கூட ஆட்சியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியவில்லை என தெரிந்ததும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நடையை கட்டினார் எடியூரப்பா.
கோபத்தில் எடியூரப்பா
இதையடுத்து மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி தலைமையில் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கோபத்தில் உள்ள எடியூரப்பா, ஆபரேஷன் லோட்டஸ் மூலமாக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சிலரை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
10 எம்எல்ஏக்கள் எஸ்கேப்
கடந்த மாதம் சுமார் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென மாயமாகி விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரிசார்ட்டுகளில் தங்க வைக்கப்பட்டனர். ஒருவழியாக சமாளித்து ஆட்சியை தொடர செய்தது காங்கிரஸ் தலைமை. இன்று கர்நாடக அரசின், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், திடீரென ஆளும் கூட்டணியின், 10 எம்எல்ஏக்கள் மாயமாகி உள்ளனர்.
கொறடா உத்தரவு
அனைத்து எம்எல்ஏக்களும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். தவறாமல் அனைவரும் ஆஜராக வேண்டும் என்று கொறடா கணேஷ் ஹுக்கேரியும், உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் இன்று சட்டசபைக்கு வரவில்லை. மதசார்பற்ற ஜனதா தளத்தின் 1 எம்எல்ஏ வரவில்லை.
ஆட்சி கவிழ்கிறதா
காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு 117 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு தேவை 113 எம்எல்ஏக்கள் ஆகும். ஆளும் கூட்டணியின் 10 எம்எல்ஏக்கள் மாயமாகியுள்ளதால், சட்டசபையில் 107 எம்எல்ஏக்கள் ஆதரவுதான் இருப்பதாக கணக்காகிறது. 10 பேருமே ஆட்சிக்கு எதிராக கலகம் செய்து எஸ்கேப் ஆகியுள்ளார்களா அல்லது, வேறு காரணங்கள் இருக்குமா என விசாரித்தபோது, சுமார் 9 எம்எல்ஏக்கள் மும்பை ஹோட்டலில் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கர்நாடக அரசுக்கு ஆபத்து உறுதி என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.