பற்றவைத்த தேஜஸ்வி.. சீறும் சிடி ரவி.. எடியூரப்பிற்கு கடும் நெருக்கடி.. கர்நாடகாவில் என்ன நடக்கிறது?
பெங்களூர்: கர்நாடகாவில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக பாஜகவின் சிடி ரவி, தேஜஸ்வி சூர்யா போன்றவர்களே மறைமுகமாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். கடந்த வருடமே எடியூரப்பா எதிர்ப்புகளை சந்தித்த நிலையில் இந்த வருடம் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட எடியூரப்பாவை நெருக்க தொடங்கி உள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் மிக மோசமாக தாக்கிய மாநிலங்களில் ஒன்று கர்நாடகா. முக்கியமாக பெங்களூரில் தினசரி கேஸ்கள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டு இருக்கிறது. யாருக்கு கொரோனா இருக்கிறது, யார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கணக்கே போட முடியாத அளவிற்கு நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
சரியான மருத்துவம் கிடைக்காமல், மருத்துவமனையில் பெட் இல்லாமல் பல நோயாளிகள் பெங்களூரை விட்டே வெளியேறும் அவலங்களும் ஏற்பட்டுள்ளது. இப்படிபட்ட நிலையில்தான் கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக அங்கு பாஜக தலைவர்களே திரண்டு உள்ளனர்.
பாஜக
முக்கியமாக பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா முதல்வர் எடியூரப்பாவிற்கு கடும் குடைச்சலை கொடுக்க தொடங்கி உள்ளார். பெங்களூர் மாநகராட்சியில் கொரோனா நோயாளிகளுக்கு பெட்களை ஒதுக்குவதில் முறைகேடு நடக்கிறது என்று தேஜஸ்வி சூர்யா புகார் வைத்தார். இங்கு பெட்களை ஒதுக்க, லஞ்சம் வாங்குகிறார்கள், பெட்களை வைத்துக்கொண்டு, ஏழை மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தேஜஸ்வி புகார் வைத்தார்.
இந்து முஸ்லீம்
மாநகராட்சி அலுவலக வார் ரூமில் வேலை பார்க்கும் இஸ்லாமிய ஊழியர்கள் மீது தேஜஸ்வி இந்த புகாரை திருப்பினாலும், கூட பெங்களூர் மாநகராட்சியில் பாஜகதான் பெரும்பான்மை வகிக்கிறது. அதோடு பெங்களூர் மாநகராட்சி மேம்பாட்டு துறை எடியூரப்பா கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இப்படி இருக்கும் போது, பெங்களூர் மாநகராட்சி ஊழல் செய்வதாக கூறுவது நேரடியாக எடியூரப்பா மீது வைக்கப்படும் புகாராக பார்க்கப்படுகிறது.
சிஸ்டம்
பெங்களூரில் சிஸ்டம் சரியில்லை என்று தேஜஸ்வி நிரூபித்ததன் மூலம் அவர் முதல்வர் எடியூரப்பாவிற்கு பெரிய அளவில் பிரச்சனைகளை உருவாக்கி, நெருக்கடிகளை கொடுத்து உள்ளார். இன்னொரு பக்கம் பாஜகவின் பொதுச்செயலாளர் சிடி ரவியும் எடியூரப்பாவிற்கு எதிராக பேசினார். அதில், சாம்ராஜநாகரில் உள்ள மருத்துவமனையில் 24 பேர் ஆக்சிஜன் இன்றி பலியாகி உள்ளனர்.
குற்றம்
இது மன்னிக்கவே முடியாத குற்றம். இதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்பை சரியாக செய்யவில்லை. இதுவே இந்த மரணங்களுக்கு காரணம். உ.பி, டெல்லியில் நடந்தது தற்போது கர்நாடகாவிலும் நடக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, என்று எடியூரப்பாவை சாடும் விதமாக சிடி ரவி விமர்சனங்களை வைத்தார்.
கொரோனா
கொரோனாவிற்கு எதிராக எடியூரப்பா செயல்படும் விதத்தை பாஜக கட்சியே விரும்பவில்லை என்று தகவல்கள் வருகின்றன. பாஜக கட்சிக்கு உள்ளேயே பலர் எடியூரப்பாவிற்கு எதிராக இதில் குரல் கொடுப்பதாக கூறப்படுகிறது. சிடி ரவி, தேஜஸ்வி இப்போது பேசுவது எல்லாம் எடியூரப்பாவிற்கு நெருக்கடி கொடுக்கும் திட்டத்தில்தான் என்றும் கூறுகிறார்கள்.
கடந்த வருடம்
கடந்த வருடமே பாஜகவில் எடியூரப்பாவின் கொரோனா செயல்திட்டங்களை எதிராக பாட்டில் யட்னல் போன்ற பாஜக எம்எல்ஏக்கள் போர்கொடி தூக்கினார்கள். தற்போது முக்கிய தலைவர்கள் எடியூரப்பாவிற்கு எதிராக களமிறங்கி உள்ளனர். எடியூரப்பாவை குறி வைத்து பேசி வருகிறார்கள். பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷுக்கு நெருக்கமான பல தலைவர்கள்தான் இப்படி எடியூரப்பாவை காலி செய்யும் விதமாக பேசி வருகிறார்கள்.
எடியூரப்பா மோதல்
கர்நாடக பாஜகவில் எடியூரப்பாவை ஓரம் கட்ட பல வருடங்களாக நடக்கும் முயற்சியின் முக்கிய படிதான் இந்த புகார்கள் என்றும் கூறப்படுகிறது. பிஎல் சந்தோசின் நேரடி உத்தரவின் பெயரில் எடியூரப்பாவை பாஜகவினரே விமர்சிப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா காரணமாக கர்நாடகாவில் பாஜகவிற்கு உள்ளேயே மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.