வருமான வரி தாக்கல், பான் கார்டு பெற ஆதார் எண் அவசியம்.... மத்திய அரசு அடுத்த அதிரடி
வருமான வரி தாக்கல் செய்யவும், பான் கார்டு பெறவும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது
டெல்லி: மத்திய அரசின் பல்வேறு திட்டப் பயன்களைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வருமான வரி தாக்கல் செய்யவும், பான் கார்டு பெறவும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ளார்.
பல்வேறு அரசு நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ரேஷன் பொருட்களைப் பெறவும், பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கும், இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெறவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாகனங்களைப் பதிவு செய்யவும், பள்ளி மாணவர்கள் சத்துணவை பெறவும், ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகளைப் பெறவும், கல்வி உதவித்தொகை பெறவும், பொதுத் தேர்வுகளை எழுதவும் ஆதார் எண் கட்டாயமாக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் அவசியம்
இதுவரை நாடு முழுவதும் 111 கோடி பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு ஆண்டும் 2.5 கோடி பேர் நாடு முழுவதும் பான் கார்டு விண்ணப்பிக்கின்றனர். தற்போது நாடு முழுவதும் 25 கோடிக்கும் அதிகமானோர் பான் கார்டு வைத்துள்ளனர்.

பான் கார்டு பெற ஆதார் எண்
இந்நிலையில், வருமான வரி தாக்கல் செய்யவும், பான் கார்டு பெறவும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ளார். அதன்படி, வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் வருமான வரி தாக்கல் செய்யும்போது ஆதார் எண் கட்டாயம் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போதும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வைப்பு நிதி கணக்கு
இதுவரை, பொது விநியோகத் திட்டம், பயிர் காப்பீடு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு போன்றவற்றுக்கு ஆதார் எண் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பான் கார்டு பெறுவதற்கும், வருமான வரி தாக்கல் செய்யவும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டினை தாண்டி மோடி தலைமையிலான மத்திய அரசு தொழிலாளர் வைப்பு நிதி கணக்கு பராமரிப்புக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உள்ளது.

பான்கார்டு ரத்தாகும்
கடந்த 2017 பட்ஜெட்டின் போது அரசு ரூ.3லட்சம் முதல் ரொக்கப் பணப்பரிவர்த்தனைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் ரூ.2 லட்சம் முதலே ரொக்கப்பணப்பரிவர்த்தனைகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. இதேபோல் பான் கார்டுடன் ஆதார் எண்ணை லிங்க் செய்யாவிட்டால், பான்கார்டை ரத்து செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் முதல் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications