ஒரே ஆடுகளத்தில் பேட்டிங்கிற்காகச் சண்டையிடும் விளையாட்டு வீரர்கள் - ராஜ்நாத்சிங் தாக்கு
ராஜ்நாத் சிங் தடுமாறி பின்பக்கமாக இருந்த சோபாவில் விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
சண்டிகர்: சரண்ஜித் சிங் சன்னிக்கும் - பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே நிலவும் பனிப்போர் குறித்து விமர்சித்துள்ளார் ராஜ்நாத் சிங். ஒரே ஆடுகளத்தில் பேட்டிங்கிற்காகச் சண்டையிடும் விளையாட்டு வீரர்கள் என ராஜ்நாத் சிங் கிண்டலடித்துள்ளார். பாஜக ஆட்சியின்கீழ் 100 காசுகளும் மக்களின் பாக்கெட்டைச் சென்றடைவதாகவும், ஏனென்றால் ஊழலுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் நாளை மறுநாள் 20ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அங்கு இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, அகாலிதளம் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பஞ்சாபில் பலமுனைப் போட்டி நிலவும் சூழல் உள்ளதால் தேர்தல் பிரசாரக்களம் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது. அமிர்தசரஸ் வந்த ராஜ்நாத் சிங் கட்சியின் தொண்டர்களுடன் இணைந்து பொற்கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் துர்க்கையானா மாதா கோயிலுக்கும் சென்று வழிபட்டார்.

தடுமாறிய ராஜ்நாத் சிங்
பிரசார மேடையில் அவருக்கு அணிவிக்க பெரிய மாலை ஒன்று கொண்டு வரப்பட்டது. அப்போது மேடையில் நின்றிருந்த பாஜக தலைவர்கள் இடையே அவருக்கு யார் மாலையை அணிவிப்பது என்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் எதிர்பாராதவிதமாக ராஜ்நாத் சிங் தடுமாறி பின்பக்கமாக இருந்த சோபாவில் விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ஊழல் இல்லாத கட்சி
தொடர்ந்து பிரச்சார கூட்டத்திற்குச் சென்ற அவர், அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பிரியங்கா காந்தி ஆகியோரைத் தாக்கிப் பேசினார். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், இதுவரை எங்கள் கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்க யாராலும் முடியவில்லை என தெரிவித்தார்.

பனிப்போர்
சரண்ஜித் சிங் சன்னிக்கும் - பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே நிலவும் பனிப்போர் குறித்து, 'ஒரே ஆடுகளத்தில் பேட்டிங்கிற்காகச் சண்டையிடும் விளையாட்டு வீரர்கள்' என வர்ணித்தார்.
இந்தப் பரப்புரையின்போது, அரவிந்த் கெஜ்ரிவாலையும் அவர் விட்டுவைக்கவில்லை.

போதைப்பொருள் இல்லாத பஞ்சாப்
போதைப்பொருள் தொடர்பான ஆம் ஆத்மி கட்சியின் அறிக்கை குறித்தும் ராஜ்நாத் விமர்சித்தார். "கெஜ்ரிவாலால் போதைப்பொருள் இல்லா பஞ்சாபை உருவாக்க முடியாது, ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியின் தெருக்கள்தோறும் மதுக்கடைகளைத் திறந்துவைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். போதைப் பழக்கத்தை முடிவுகட்ட காங்கிரசும் ஒன்றும் செய்யவில்லை. இந்தப் போதைப்பழக்கத்தை வேரறுக்கும் துணிச்சல் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது என்றார்.

ஊழல் இல்லாத ஆட்சி தரும் பாஜக
ஒருமுறை நாங்கள் ஆட்சிக்கு வந்தபின், யார் இங்கு போதைப்பொருள் விற்பனை செய்கின்றார்கள் என்று பார்ப்போம்" என்று சவால்விடுத்தார். நான் 100 காசுகள் அனுப்பினால் மக்களுக்கு 15 காசுகள்தாம் சென்றடைகின்றன என்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பயன்படுத்திய சொல்லை சுட்டிக்காட்டிய ராஜ்நாத், காங்கிரசால் ஊழலை ஒழிக்க முடியவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். ஆனால், பாஜக ஆட்சியின்கீழ் 100 காசுகளும் மக்களின் பாக்கெட்டைச் சென்றடைவதாகவும், ஏனென்றால் ஊழலுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications