சென்னையில் இயங்கும் 64 சட்டவிரோத ஸ்பா, மசாஜ் சென்டர்கள்: ரெய்டில் அதிர்ச்சி தகவல்
சென்னையில் செயல்படும் 150 க்கும் மேற்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 64 ஸ்பா மற்றும் மசாஜ் செண்டர்கள் சட்டவிரோதமானவை என தெரியவந்துள்ளது. போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி சிக்கிய விவகாரத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக இயங்கும் 64 ஸ்பா, மசாஜ் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு காவல்துறை வேண்டுகோள் வைத்துள்ளது.
வளிமண்டல மேலடுக்குச்சுழற்சியால் 5 நாட்களுக்கு கனமழை - நவ.25,26 அடி வெளுக்கப்போகுது
சட்டவிரோத பாலியல் தொழிலுக்கு பயன்படும் ஸ்பா, மசாஜ் சென்டர்கள்
சென்னை போன்ற பெரு நகரங்களில் அனைத்துவிதமான மாநிலத்தைச் சேர்ந்த மக்களும், தொழிலதிபர்களும், படித்த மேல்தட்டு சிந்தனையாளர்களும், மென்பொறியாளர்களும் அதிகம் வசிக்கும் நகரமாகும். அதற்கேற்றார்போல் அவர்கள் பொழுதுப்போக்க, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, அழகுப்படுத்திக்கொள்ள, உடல் புத்துணர்ச்சிக்காக நாடும் இடங்களாக பியூட்டி பார்லர்கள், ஸ்பா, மசாஜ் சென்டர்கள் சென்னையில் அதிகரித்துள்ளன.
இதில் நல்ல நோக்கத்துக்காக சென்னையில் போலீசாரின் உரிமம் பெற்று முறையான பயிற்சிகள் பெற்ற வல்லுனர்களின் உதவியோடு மருத்துவ ரீதியில் நடக்கும் மசாஜ்கள், பிசியோ சிகிச்சைகள், உடல் அழகூட்டும் நிலையங்கள் செயல்படுகின்றன. ஆனால் ஸ்பா, மசாஜ் சென்டர் போர்வையில் பாலியல் தொழிலும் அதிகம் நடக்கத்தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் முன்பு போல் தனியாக இயங்க முடியாத நிலை, ஸ்பா, மசாஜ் சென் ட்ர் போர்வையில் வாடிக்கையாளர்களை வரவழைத்து பாலியல் தொழில் செய்வது அதிகரித்துள்ளது.
விபச்சார தடுப்பு பிரிவின் மெத்தனம், போலீஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் குற்றவாளிகள்
விபச்சாரத்தடுப்புப்பிரிவு (ஏவிஎஸ்) இதுபோன்ற ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களை கண்காணிக்க வேண்டும், நுண்ணறிவுப்பிரிவு காவலர்கள் கண்காணித்து முறையாக ரிப்போர்ட் போட வேண்டும். இதுகுறித்து பேசிய பெயர் சொல்ல விரும்பாத ஒரு காவல் அதிகாரி இதுபோன்ற ஸ்பா, மசாஜ் சென்டர்களை நடவடிக்கை எடுக்காமல் இருக்க அந்தந்த லிமிட் ஸ்டேஷன்களுக்கு முறையான கவனிப்பு நடக்கிறது.
சில பெரிய மனிதர்களின் பினாமிகள் மூலமாகவும் இதுபோன்ற சென் ட்ர்கள் நடக்கும்போது அதிகாரிகள் நமக்கு எதற்கு வம்பு என ஒதுங்கி விடுகிறார்கள், அதனால் தற்போது சென்னையில் உரிமம் இல்லாமல் ஸ்பா, மசாஜ் சென் டர்கள் பெருகி விட்டன. இதற்கு லோக்கல் ஸ்டேஷன்களும் காரணம் என்று தெரிவித்தார்.
தென் சென்னையில் அதிகம்
தென் சென்னை அடுத்து மத்திய சென்னையில் இதுபோன்ற ஸ்பா மசாஜ் சென்டர்கள் அதிகம். இந்தப்பகுதிகளில் தான் வசதிப்படைத்தவர்கள், வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து வந்து தங்குபவர்கள் அதிகம். இதனால் இப்போர்வையில் பாலியல் தொழில் நடக்கிறது. சென்னையில் லஞ்சம் வாங்கி சிக்கிய இன்ஸ்பெக்டர்கள் வின்சென்ட், சரவணன் இருவர் வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனை விசாரணை அடிப்படையில் போலீஸாருக்கு பல தகவல்கள் கிடைத்தது.
சோதனைக்கு காரணம் இதுதான்
இதையடுத்து காவல் ஆணையர் கவனத்துக்கு பல திடுக்கிடும் விஷயங்கள் கொண்டுச் செல்லப்பட்டன சில கும்பல்கள் போலீசாரின் முறையான உரிமம் பெற்றதாக கூறிக்கொண்டு, எந்தவித உரிமம் மற்றும் பயிற்சியும் பெறாமல் சட்ட விரோதமான செயல்கள் மற்றும் சில மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் உள்ளிட்டவை நடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று சென்னை மாநகரம் முழுவதும் 151 மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா சென்டர்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சோதனையில் சிக்கிய ஆதாரங்கள் ரெய்டுக்கு காரணம்
கீழ்பாக்கம், தியாகராயநகர், அண்ணாநகர், வடபழனி, அடையார், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் என்ற இரண்டு காவல் ஆய்வாளர்களும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதற்கு துணையாக இருந்தது, அவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடத்த அனுமதி அளித்தது இந்தச்சோதனைக்கு பின்புலமாக அமைந்தது.
64 சட்டவிரோத மசாஜ் சென்டர்கள்
இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி அதிரடி சோதனை நடைபெற்றது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு இந்த சோதனை நடந்தது. போலீஸார் நடத்திய சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. பல பெரிய மனிதர்கள் பினாமியாக பல ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்கள் நடத்தியது தெரியவந்துள்ளது. பாலியல் தொழில் மற்றும் அனுமதி பெறாமல் உரிமம் இன்றி சட்டவிரோதமாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.
சென்னையில் நேற்று நடத்திய 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் 64 சென்டர்கள் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கியது தெரிய வந்துள்ளது. சட்டவிரோதமாக செயல்படும் மசாஜ் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.