காலேஜ்.. கறிக்கடை.. கத்தி.. சிக்கலோ சிக்கல்.. பிகில் பேச்சால் கட்டம் கட்டப்படும் விஜய்?
Recommended Video
சென்னை: பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் அரசியல் பேசினாலும் பேசினார்.. அடுத்தடுத்து அவருக்கும், அந்த திரைப்படத்திற்கும் சிக்கல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோருக்கு அரசியலில் அதிக ஈடுபாடு உள்ளது அனைவரும் அறிந்ததுதான்.
விஜய் எப்போது வேண்டுமானாலும் அரசியலில் பிடிக்கலாம் என்ற பேச்சும் ஒரு பக்கம் இருந்து தான் வருகிறது இந்த நிலையில்தான் சமீபகாலமாக அவர் நடித்து வெளியான திரைப்படங்களில் தீவிர அரசியல் கருத்துக்களை பேசத் தொடங்கியுள்ளார் விஜய்.
அதிமுக கோபம்
மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவை தொடர்பான கருத்துக்கள் மத்திய அரசை சீண்டும் வகையில் இருந்தன. சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற கோமளவல்லி என்ற பெயர் மற்றும் சில கருத்துக்கள் அதிமுகவினரை கோபத்தில் ஆழ்த்தி படத்தின் கட்அவுட்டுகளை கிழித்தெறியும் அளவுக்கு கொண்டு சென்றது.
கிண்டல்
இந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் சமீபத்தில் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய விஜய், சமீபகாலங்களை போலவே இந்த விழாவிலும் அரசியல் பேசினார். சுபஸ்ரீ பேனர் விழுந்து பலியான சம்பவம் தொடர்பாகவும், கருத்து தெரிவித்தார். அத்தோடுவிடவில்லை, அவர். யாரை எங்கே வைக்க வேண்டும், என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று பகிரங்கமாக கிண்டல் செய்தார். இந்த கருத்துக்களுக்கு, ஏற்கனவே அதிமுக தரப்பிலிருந்து பதிலடி ஆரம்பித்துவிட்டது. அரசியல் பேசிதான் படங்களை ஓட வைக்கும் நிலைமையில், விஜய், இருக்கிறார் என்று அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.
நோட்டீஸ்
வெறும் கருத்து என்ற அளவில் மட்டுமல்லாது, நடவடிக்கையையும், ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. விஜய் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்ற, கல்லூரிக்கு உயர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யாரை கேட்டு இந்த நிகழ்ச்சிக்கு, அங்கே அனுமதி தந்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு இட வசதி ஏற்படுத்தித் தர வருங்காலத்தில் யாருமே, ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பர்ஸ்ட் லுக்
மற்றொரு பக்கம், தங்கள் தொழிலை விஜய் அவமானப்படுத்தி விட்டார் என்று கறிக்கடை சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பிகில் திரைப்படத்தின் முதல் லுக் வெளியாகி நாட்கள் பல கடந்து விட்ட நிலையில், திடீரென இப்போதுதான் இந்த எதிர்ப்பு கிளம்புகிறது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு தான்தான், முக்கிய பங்காற்றியதாக விஜய் பேசியதாக கூறப்பட்ட நிலையில் தான், அவர் நடித்த தலைவா படம் வெளியாவதில் மிகப் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டன. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு எஸ்டேட்டுக்கு விஜய் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். திட்டமிட்டதுபோலன்றி, சில நாட்களுக்குப் பிறகு தான் அந்த திரைப்படம் வெளியானது.
கத்தியோடு விஜய்
சர்கார் திரைப்படத்தின் போது ஆளும் கட்சியினரால் தியேட்டர்கள், முற்றுகை செய்யப்பட்டதோடு, பேனர்கள் கிழித்தெறியப்பட்டன. இதோ இப்போது பிகில் திரைப்படத்தை சுற்றியும், ஏகப்பட்ட சர்ச்சைகள் ஆரம்பித்துள்ளன. அடுத்தடுத்த நாட்களில் விஜய்க்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகள் தொடரக்கூடும் என தெரிகிறது. இதன் உச்சமாக, இன்று அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், விஜய் கத்தியோடு இருப்பதை போல இருக்கும் போஸ்டரை பார்த்தால், அவர் ரசிகர்களும் கத்தியை தூக்க வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளார். பிகிலை சுற்றி, இன்னும் என்னென்ன கருத்து வெள்ளம் பாயப்போகிறதோ தெரியவில்லை!