பிள்ளையார் சுழி போட்ட அதிமுக.. பின்னாடியே அடுத்தடுத்து ஓடி வந்த கட்சிகள்.. செம தமாஷ்!
அதிமுக, திமுகவில் விருப்ப மனுக்கள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன
சென்னை: ஜெயலலிதா இருந்தபோது இப்படித்தான் நடக்கும். தேர்தல் என்று வந்தாலே ஜெயலலிதாதான் எதிலுமே முதலில் இருப்பார். விருப்ப மனு வாங்குவது, நேர்காணல் நடத்துவது, வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் தொடங்குவது என எல்லாமே அவர்தான் நம்பர் ஒன் (ஊழல் வழக்கிலும் கூட அவர்தான் நம்பர் ஒன்.. அது வேற கதை).
இப்போது அதே கதை திரும்பியுள்ளது. இந்த முறை சட்டசபைத் தேர்தல் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது. இதுவரை இல்லாத காட்சிகளை தமிழ்நாடு காணப் போகிறது.
அதிமுக பலமிழந்து விட்டதாக கூறவே முடியாத அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கட்சியை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறார்.
பாமக
மறுபக்கம் பாஜக, பாமக என ஏகப்பட்ட கட்சிகள்தங்களது செல்வாக்கை நிரூபிக்க துடியாத் துடித்துக் கொண்டுள்ளன. இன்னொரு பக்கம் கமல்ஹாசன், சீமான் ஆகியோர் இந்த முறை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஸ்கெட்ச் போட்டுக் கொண்டுள்ளனர்.
ஸ்டாலின்
இதற்கு மத்தியில்தான் திமுக காலம் தள்ளிக் கொண்டுள்ளது. அது போகும் பாதையே ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. ஆளுக்கு முதலாக மு.க.ஸ்டாலின் தான் பிரச்சாரக் களத்தில் முதலில் நிற்கிறார். அவர் தான் அதிரடியாக அடுத்தடுத்து பிரச்சாரத்தை தொடங்கி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்துதான் எடப்பாடியார் கிளம்பினார். சீமான் போனார், கமல்ஹாசன் வந்தார்.. ராகுல் காந்தி கூட வந்து விட்டுப் போனார்.
பிரதமர் மோடி
இந்த நிலையில் ஆளுக்கு முதல் நபராக அதிமுக விருப்ப மனுக்களை வாங்கப் போவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்தது. முந்தாநாள்தான் முதல்வரை பிரதமர் மோடி தனித்து சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் விருப்ப மனுக்களை வாங்கப் போவதாக நேற்று அதிமுக அறிவிக்கிறது. எனவே அதிமுகவுக்கு தேர்தல் தொடர்பாக பிரதமரிடமிருந்து உறுதியான தகவல் ஏதேனும் கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
வாக்குக்கு குறி
ஆனால் பாருங்க.. அதிமுக அறிவித்த சில மணி நேரங்களிலேயே மக்கள் நீதி மய்யமும் விருப்ப மனு வாங்கப் போவதாக அறிவிக்கிறது. தொடர்ந்து திமுக அறிவித்தது. ஆக, மொத்தம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் குறித்த உறுதியான தகவல் ஏதோ தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் ஒன்று சேர்ந்தாற் போல அதிமுகவைத் தொடர்ந்து அத்தனை கட்சிகளும் அடுத்தடுத்து விருப்ப மனுக்களைப் பெறும்அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.