பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தியதே அம்பேத்கர்தான்.. திருமாவளவனுக்கு நாராயணன் திருப்பதி பதிலடி
சென்னை: இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தியதே அம்பேத்கர்தான் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
பொதுசிவில் சட்டத்தை நாடாளுமன்றம் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்ததற்கு பதிலடியாக நாராயணன் திருப்பதி இவ்வாறு கூறியுள்ளார்.
பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பான விவாதங்கள் தமிழகத்தில் சூடுபிடித்து வரும் நிலையில், நாராயணன் திருப்பதியின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பொது சிவில் சட்டம்... நாடு விடுதலை முதல் சரளா முட்கல் வழக்கு தீர்ப்பு வரை... வரலாற்று பார்வை
பொது சிவில் சட்டத்தை நோக்கி பாஜக
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் நீண்டகால கொள்கைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், இது இஸ்லாமியர்களை பாதிக்கும் நடவடிக்கை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இருந்தபோதிலும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியே தீருவது என்ற முடிவோடு பாஜக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பொது சிவில் சட்டம் விரைவில் அமலாகும் என அண்மையில் கூறியிருந்தார்.
தனிநபர் மசோதா
இதுபோன்ற சூழலில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் குளிர்காலக் கூட்டத்தொடரில் பாஜக எம்.பி. கிரோடி லால் மீனா, மாநிலங்களவையில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தக் கோரி தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அந்த மசோதா நிறைவேறியது. இதன் தொடர்ச்சியாக, பொதுசிவில் சட்டம் குறித்து வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறப் போகிறது.
திருமாவளவன் கண்டனம்
இந்நிலையில், இந்த தனி நபர் மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், "பொது சிவில் சட்டத்தை மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருப்பதே அரசியலமைப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் கேடான முயற்சி" எனக் கூறியிருந்தார்.
நாராயணன் திருப்பதி பதிலடி
இந்நிலையில், திருமாவளவின் இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது சிவில் சட்டத்தில் இந்தியாவில் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியதே அம்பேத்கர்தான். பொதுசிவில் சட்டமானது, சமதர்ம சமுதாயம் இல்லாத, இந்தியாவின் சமூக அமைப்பை சீர்திருத்தம் சட்டம் என்று ஆணித்தரமாக வாதிட்டவர் அம்பேத்கர். இவ்வாறு கூறிய அம்பேத்கரின் எண்ணங்களை வலுவிழக்கச் செய்பவராக திருமாவளவன் இருக்கிறார்" என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.