மந்தநிலை.. உலகம் முழுவதும் பறிபோகும் வேலைவாய்ப்புகள்.. அனைத்து துறைகளுக்கும் ஆபத்தா? உண்மை என்ன?
சென்னை: உலகளாவிய பொருளாதார மந்த நிலையால் ட்விட்டர், அமேசான், பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா உள்பட பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் பணியை பறிகொடுத்து வரும் நிலையில் இது அைனைத்து துறைகளுக்கும் பரவுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் உண்மை நிலவரம் என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
Recession, Layoffs கடந்த மாதங்களில் இருந்து அதிகளவில் ஒவ்வொருவரும் கேட்ககூடிய வார்த்தைகளாகவும், சமூக வலைதளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகவும் மாறி உள்ளன.
இதில் Recession என்பதன் தமிழ் அர்த்தம் மந்த நிலை என்பதையும், Layoff என்பதன் தமிழ் அர்த்தம் பணி நீக்கம் என்பதையும் தான் குறிக்கிறது.
மீண்டும் மாற்றம்.. முன்னேற்றம்.. 2026ல் பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி! அன்புமணி திட்டவட்டம்!
அதிர்ச்சி அளிக்கும் மந்த நிலை
இது பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்களுக்கு தெரிந்த விஷயம் என்றாலும் கூட தற்போது இந்த 2 வார்த்தைகளும் அவர்களுக்கு பெரும் இம்சையாக மாறி போய் உள்ளது. இதன் பின்னணியில் உள்ள விபரங்கள் சிலருக்கு தெரிந்து இருந்தாலும் பலருக்கும் இதுபற்றிய புரியாத புதிராக உள்ளது. Recession என்பது பொருளாதார மந்த நிலையை குறிக்கும் நிலையில்ம் வேலையிழப்பை தான் Layoff அர்த்தப்படுத்துகிறது. அந்த வகையில் பார்த்தால் Recession, Layoffs எனும் வார்த்தைகள் ஒன்றுக்கொன்று நேரடியாக தொடர்பு கொண்டு தற்போதைய உலகத்தை அதிர வைத்து வருகின்றன.
எலான் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க்
அதாவது உலக நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் ஆகியற்றால் பெரிய பெரிய நிறுவனங்கள் இக்கட்டான நிலையை சந்தித்துள்ளன. இதனால் தங்களது நிறுவனத்தில் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுசெய்ய நிறுவனங்கள் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் தான் உலகில் பெரும் பணக்காரராக அறியப்படும் டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியும், ட்விட்டரின் உரிமையாளருமான எலான்மஸ்க், பேஸ்புக் சிஇஓவான மார்க் ஜுக்கர்பெர்க், அமேசான் நிறுவன தலைவரான ஜெப் பெசோஸ் உள்ளிட்ட உலக பணக்காரர்கள் கூட தங்களின் நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையை துவங்கி செயல்படுத்தி வருகின்றன.
மெட்டா, அமேசான் ஆள்குறைப்பு
அதன்படி பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா 11 ஆயிரம் ஊழியர்களை நீக்கம் செய்வதாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இது அந்த நிறுவனம் சார்பில் உலகம் முழுவதும் உள்ள மொத்தம் ஊழியர்களில் 13 சதவீதமாகும். அதேபோல் அமேசான் சார்பில் ஒரு வாரத்தில் மட்டும் 10 ஆயிரம் பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் கம்பெனி வரலாற்றில் ஒரே கட்டமாக பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களின் அடிப்படையில் பார்த்தால் இதுதான் அதிகபட்ச அளவாக மாறி உள்ளது.
ட்விட்டர் ஆள்குறைப்பு
இதேபோல் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் புதிதாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன்பிறகு அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரியாக இருந்த நெட் சீகல், சட்டப்பிரிவில் தலைமை பொறுப்பு வகித்த விஜயா கட்டே உள்ளிட்டவர்களின் பணியை காலி செய்தார். மேலும் 7500 பேரை மொத்தமாக நீக்கம் செய்துள்ளார். இது ட்விட்டர் நிறுவனத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் 50 சதவீதமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் 90 சதவீத ட்விட்டர் நிறுவன பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஸ்நாப் - பைஜூஸ்
இதேபோல் ஸ்நாப் (Snap) நிறுவனம் சார்பில் உலகம் முழுவதும் பணியாற்றும் பணியாளர்களிடம் 20 சதவீதம் அதாவது மொத்தமுள்ள 6,400 ஊழியர்களிடம் 1,300 பேரின் வேலையை பறிக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை என்பது இந்த ஆண்டு மட்டும் 80 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி இந்த நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. மேலும் பைஜூஸ் நிறுவனம் சார்பில் 2,500 பணியாளர்களை நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 5 சதவீதமாகும். அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் 2022ல் மட்டும் 1000 பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக Axios report கூறியுள்ளது.
ஆட்குறைப்பு ஏன் ?
போர்ப்ஸ் கூற்றின்படி கொரோனா காலத்தில் ஏற்பட்ட நிதி பிரச்சனை ஏற்பட்டது. அதன்பிறகு நிலைமை சரியாகும் என அதிகமானவர்கள் பணியில் சேர்க்கப்பட்ட நிலையில் தான் தற்போது பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. இதனால் நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை சரிசெய்ய வேறு வழியின்றி ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளது
இன்னும் அதிகரிக்க வாய்ப்பு?
மேலும் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் பொருளாதார மந்த நிலை என்பது இன்னும் அதிகரிக்கலாம். இதனால் இன்னும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதோடு தற்போதைய சூழலில் இயந்திரமாக்கல் எனும் ஆட்டோமேஷன் செயல்முறை என்பதும் வேலையிழப்புக்கு முக்கிய காரணம். இதற்கு மத்தியில் பொருளாதார மந்த நிலை வந்ததால் லே-ஆப்கள் தவிர்க்க முடியாத வகையில் உள்ளது என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் Layoffs.fyi இணையதளம் வெளியிட்டுள்ள விபரங்களின் படி உலகில் இந்த ஆண்டில் மட்டும் 1.20 லட்சம் பேர் வேலையிழப்பை சந்திக்க நேரிடும் என கணித்துள்ளது.
பிற துறைகளுக்கு பரவுமா?
இதற்கிடையே தான் தற்போதைய சூழலில் வேலையிழப்புகள் என்பவை பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் தான் உள்ளது. இது பிற துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி நிபுணர்கள் கூறுகையில், ‛‛தொழில்நுட்ப துறையில் வேலையிழப்புகள் உள்ளன. இருப்பினும் கூட அமெரிக்காவை பொறுத்தமட்டில் வேலையின்றி இருக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இது ஓரளவு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். ஏனென்றால் உலகம் முழுவதும் இன்னும் வேலை நீக்க நடவடிக்கைகள் தீவிரமடையவில்லை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் தற்போதைய சூழலில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால் உலக பொருளாதாரத்தை மீட்டெடுக்க போராட்டம் நடக்கிறது. இருப்பினும் எதிர்காலத்தில் இதில் இருந்து மீள வாய்ப்பு உள்ளது. இதனால் வேலையிழப்புகள் பிற துறைகளுக்கும் பரவுவதற்கான வாய்ப்பு என்பது மிகக்குறைவு தான்'' என்றார்.
உலக வங்கி கூறுவது என்ன?
உலக பொருளாதாரத்தில் பொருளாதார சரிவு என்பது தற்போது செங்குத்தான நிலையில் உள்ளது. கொரோனா காலத்தில் இருந்து அமெரிக்கா, சீனா, ஐரோப்பாக உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார நிலை என்பது மிகவும் மோசமாகி வருகின்றன. உலக வங்கியின் ஆய்வின்படி உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் ஒரே நேரத்தில் பணவீக்கத்துக்கு பதிலளிக்கும் வகையில் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. இது 2023ல் உலகளாவிய மந்த நிலையை இன்னும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கலாம் என எச்சரித்துள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
இதுபற்றி உலக வங்கி குழும தலைவர் டேவிட் மல்பாஸ் கூறுகையில், ‛‛உலகளாவிய வளர்ச்சி என்பது குறைந்துள்ளது. பல நாடுகளில் மந்த நிலையை நோக்கி செல்கின்றன. இதனால் வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் தொழில் பிரிவுகள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். இது பேரழிவை தர வாய்ப்பு உள்ளதோடு இந்த நிலை நீண்டகாலம் நீடிக்க வாய்ப்புள்ளது. இதனை சரிசெய்ய பணவீக்கத்தை குறைத்து நாணய மதிப்பை நிலையுடன் வைத்து கொண்டு விரைவான வளர்ச்சிக்கான கொள்கையை வளர்க்க வேண்டும். புதிய மற்றும் கூடுதல் முதலீடுகளை ஈர்த்து உற்பத்தி திறனை அதிகரிக்க முயல வேண்டும்'' என அட்வைஸ் வழங்கி உள்ளார். இருப்பினும் தற்போதைய சூழலில் வேலையை இழந்தவர்களுக்கு புதிய வேலையை தேடுவது என்பது சற்று கடினமான காரியமாக உள்ளது.