யார் வேண்டுமானாலும் தமிழ் பாடம் எடுக்கலாமா? இதுதான் தமிழுக்கு செய்யும் மரியாதையா? ராமதாஸ் ஆவேசம்
சென்னை: "தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் எந்த பேராசிரியர் வேண்டுமானாலும் தமிழ் பாடம் எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட, தன்னாட்சி பெறாத பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான முதல் இரு பருவங்களில் தமிழ் கட்டாயப்பாடமாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடத்தை யார் வேண்டுமானாலும் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் அனுமதித்திருப்பதை ஏற்க முடியாது.
தமிழ் மொழிக்கு அவமரியாதை
தமிழ் இலக்கியத்தில் உரிய தகுதி பெற்ற ஆசிரியர் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடத்தை நடத்தலாம். இல்லாவிட்டால், பள்ளியில் தமிழை ஒரு பாடமாக படித்த பொறியியல்/தொழில்நுட்பம்/ அறிவியல் மற்றும் மானுடவியல் பேராசிரியர்களும் தமிழ்ப் பாடத்தை நடத்தலாம் என்று அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கடிதம் எழுதியுள்ளார். இதைவிட தமிழ் மொழியை யாராலும் அவமதிக்க முடியாது. தமிழை கட்டாயப்பாடமாக்கியதன் நோக்கத்தையே இது சிதைத்து விடும்.
"தமிழக அரசின் விதிகள் என்ன ஆனது?"
தமிழ்நாட்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடங்களை தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களும், 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான தமிழ்ப் பாடங்களை தமிழ் இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியர்களும் தான் நடத்த முடியும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்களை நடத்துபவர்கள், தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். வேறு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் தமிழ் இலக்கியத்தில் உயர்கல்வி கற்றிருந்தாலும் கூட, அவர்களால் எந்த வகுப்புக்கும் தமிழை கற்பிக்க முடியாது என்று தமிழக அரசே விதிகளை வகுத்துள்ளது.
தமிழுக்கு 15 பாடவேளைகள் போதுமா?
அப்படி இருக்கும் போது, இத்தகைய முடிவுக்கு வருவதற்கு முன்பாக தமிழறிஞர்களுடனோ, தமிழ்த்துறை பேராசிரியர்களுடனோ கலந்தாய்வு நடத்தப்பட்டதா என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளிக்க வேண்டும். அதேபோல், பொறியியல் படிப்பில் ஒவ்வொரு பருவத்திலும் 15 பாடவேளைகள் மட்டும் தான் தமிழ் கற்பிக்கப்படும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனையாகும். ஒரு பருவத்திற்கு 90 பணிநாட்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தது 45 பாடவேளைகள் ஒதுக்கப்படுகின்றன. அதேபோல், தமிழுக்கும் குறைந்தது 45 பாடவேளைகள் ஒதுக்கப்பட வேண்டும்.
"உரிய பேராசிரியர்களே தமிழ் கற்பிக்க வேண்டும்"
பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடம் அறிமுகம் செய்யப்படுவதன் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், தகுதியான தமிழ்ப் பேராசிரியர்களைக் கொண்டு தான் தமிழ்ப்பாடம் கற்பிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான எண்ணிக்கையில் தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன் ஒவ்வொரு பருவத்திலும் தமிழுக்கு 45 பாடவேளைகளை ஒதுக்க வேண்டும். அடுத்த கல்வி ஆண்டில் இரண்டாம் ஆண்டிலும் தமிழ்ப் பாடம் நீட்டிக்கப்பட வேண்டும். தமிழ்ப் பாடங்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இத்தகைய திட்டங்கள் மூலம் பொறியியல் மாணவர்களின் தமிழறிவை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.