அசானி புயல்... காற்றுடன் கனமழை... சென்னையில் விமான சேவை பாதிப்பு - 10 விமானங்கள் இன்று ரத்து
அசானி புயல் காரணமாக சென்னைக்கு வரும், புறப்படும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.அசானி புயல் எச்சரிக்கை காரணமாக விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அசானி புயல் வங்கக் கடலில் நிலை கொண்டு தீவிர புயலாக உருமாறியுள்ளது. இது ஆந்திராவில் காக்கிநாடாவில் இருந்து தென்கிழக்கில் 130 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதால் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வடக்கு ஆந்திரா ஒடிசா கடற்கரையை ஒட்டி சென்றடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடகிழக்கு திசையிலிருந்து மாறி வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என்றும் 24 மணி நேரத்தில் புயலாக வலு குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஒடிசாவில் பூரி, ஜகத்சிங்பூர் மற்றும் கேந்திரபாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அசானி புயல் காரணமாக வட தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசானி புயல்.. சென்னையில் இன்னும் இரு நாட்களுக்கு மழை.. தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்!
பலத்த மழை
அசானி புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை புரசைவாக்கம், சேப்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை, கிண்டி, எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, நுங்கம்பாக்கம், ஆலந்தூர், பரங்கிமலை, கிண்டி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
கனமழை
எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. அசானி புயல் காரணமாக சென்னைக்கு வரும், புறப்படும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை ரத்து
சென்னையில் இருந்து ஹைதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கனமழை நீடிக்கும்
சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தாம்பரம், சேலையூர், சேப்பாக்கம், மேடவாக்கம், மடிப்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அலுவலகத்திற்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் பாதிக்கப்பட்டனர். இன்றைய தினம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.