பி.இ, பிடெக் படிக்க ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம்..ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் கலந்தாய்வு ஆரம்பம்
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஜூன் 20 முதல் ஜூலை 19 ஆம் தேதிவரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்விதுறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஜூன் 20 முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்விதுறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 22 முதல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என கூறினார். முதல் 15 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் 7 நாட்களில் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் மீண்டும் வேகமெடுத்த கொரோனா.. 3 மாதங்களில் இல்லாத அளவு பாதிப்பு.. திணறும் 2 மாநிலங்கள்!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இணையதளம் மூலம் வரும் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
பொறியியல் விண்ணப்பம்
இணையதளத்தில் விண்ணப்பிக்க ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள். ஆகஸ்ட் 8ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து ஆகஸ்ட் 16ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்றும் அமைச்சர் கூறினார். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஆண்டு 3 நாட்கள் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 7.5 சதவீத இட ஒதுக்கீடில் படித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22லும் கவுன்சிலிங் துவங்கும் என்று கூறினார்.
110 மையங்களில் விண்ணப்பம்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவுக்கு ஜூன் 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 51 இலவச மையங்கள் இருந்த நிலையில், தற்போது 110 இலவச மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
எப்போது தொடங்கும்
ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் - ஜூன் 20, 2022. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க / அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் - ஜூலை 19, 2022. அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண் ஒதுக்கப்படும் நாள் - 22.07.2022 சேவை மையம் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு நாட்கள் - 20.07.2022 முதல் 31.07.2022 வரை.
ஆன்லைன் மூலம் சிறப்புக் கலந்தாய்வு
08.08.2022 அன்று தர வரிசைப் பட்டியல் வெளியாகும். 09.08.2022 முதல் 14.08.2022 வரை சேவை மையம் வாயிலாகக் குறைகளை நிவர்த்தி செய்யலாம்.
மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கும் 16.08.2022 முதல் 18.08.2022 வரை கலந்தாய்வு நடைபெறும்.
பொதுக் கலந்தாய்வு
பொதுக்கல்வி , தொழில்முறைக் கல்வி , அரசுப் பள்ளி 7.5% ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கும் 22.08.2022 முதல் 14.10.2022 வரை கலந்தாய்வு நடைபெறும். துணைக் கலந்தாய்வு 15.10.2022 மற்றும் 16.10.2022 வரை நடைபெறும். எஸ்.சி.ஏ காலியிடம் எஸ்.சி. வகுப்பிற்கான கலந்தாய்வு 17.10.2022 மற்றும் 18.10.2022 தேதிகளில் நடைபெறும்.
கலந்தாய்வு இறுதி நாள் 18.10.2022. நீட் தேர்வு முடிவு வந்த பிறகு தான் பொறியியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கை துவங்கும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.