எனக்கா ஹிந்தியா ஏன் தெரியாது? சூப்பரா பேசுவேன்.. பிரஸ் மீட்டில் பல்டி அடித்த பாஜக உமா ஆனந்தன்
சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் தனக்கு இந்தி தெரியாது என கூறிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், வெளியே வந்த பிறகு தனக்கு இந்தி தெரியும் என தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் ஒரே ஒரு வார்டை மட்டும் பாஜக கைப்பற்றியது. இந்த வார்டின் உறுப்பினர் உமா ஆனந்தன். நாதுராம் கோட்சேவுக்கு ஆதரவாக இவர் கருத்து தெரிவித்திருந்தார் என்ற ஒரு விமர்சனம் உள்ளது.
ஆனால் அதையும் தாண்டி அவர் வென்றுள்ளார். இந்த நிலையில் நேற்றை தினம் சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் கூடியது. ஏற்கெனவே மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்தால் இந்தி திணிப்பு பிரச்சினை துளிர்விடத் தொடங்கியுள்ளது.

நமஸ்காரம்
இந்த நிலையில் நமஸ்காரம் என கூறி தனது உரையை தொடங்கினார். அப்போது வணக்கம் என திமுக உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் சப்தமாக கூறினர். இதைத் தொடர்ந்து பேசிய உமா ஆனந்தன், ஆங்கிலம், தமிழ் கலந்து நான் பேசுவேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்றார்.

இந்தியில் பேச வேண்டாம்
அதற்கு இந்தியில் மட்டும் பேசிவிட வேண்டாம் என திமுக உறுப்பினர்கள் கூற உமாவோ எனக்கும் இந்தி தெரியாது என பதிலளித்தார். இதனால் திமுக உறுப்பினர்கள் கை தட்டி சிரிப்பலையை எழுப்பினர். இதையடுத்து அவர் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு சொந்த காரணங்களுக்காக மாமன்ற கூட்டத்தை விட்டு வெளியே வந்தார்.

மரியாதையுடன் நடந்த உறுப்பினர்கள்
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் தில்லை அம்பலத்தானை வணங்கி இந்த பேட்டியை தொடங்குகிறார். ஏனென்றால அவர்தான் வாக்காளர் மனதில் உள்ளே நுழைந்து எனக்கு வாக்கு கிடைக்க செய்துள்ளார். மாமன்ற உறுப்பினர்கள் அனைவருமே மரியாதையுடன் நடந்து கொண்டார்கள்.

இந்தி தெரியும்
சிங்கார சென்னையாக மாற்றுவதை விட பாதுகாப்பான சென்னையாக மாற்ற வேண்டும். வார்டு உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் கண்டிப்பாக வழங்க வேண்டும். இந்த வார்டு உறுப்பினர் ஊதியத்தை மத்திய மாநில அரசுகள் பிரித்து வழங்க வேண்டும். எனக்கு இந்தி தெரியும் ஆனால் இன்று பட்ஜெட் நாள் என்பதால் எந்த பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக எனக்கு இந்தி தெரியாது என மாமன்றத்தில் தெரிவித்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications