சிக்கலில் பாஜக.. இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்..அண்ணாமலையின் அடுத்த மூவ் இதுதான்
ஒரே நாளில் அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்துள்ளதால் தமிழ்நாடு பாஜக சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவிடம் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியே ஆதரவு கேட்டிருந்தனர். இதில் பாஜக தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தினாலும் இன்னும் கூட ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்ன? என்பதை தெளிவுப்படுத்தவில்லை. இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் அணியினர் அதிரடியாக இன்று வேட்பாளர்களை அறிவித்தனர். இதனால் தமிழ்நாடு பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அண்ணாமலை டெல்லி செல்லும் நிலையில் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பது பற்றிய யூகங்கள் கிளம்பி உள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த மாதம் காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
கன்ஃபார்ம்.. இரட்டை இலை சின்னம் முடக்கம்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை ஓபிஎஸ் அணியும் அறிவித்தது!
ஓபிஎஸ், ஈபிஎஸ் போட்டியிடுவதாக அறிவிப்பு
இதற்கிடையே தான் கடந்த முறை அதிமுக கூட்டணியில் இந்த தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் மீண்டும் அந்த கட்சிக்கே தொகுதி ஒதுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் ட்விஸ்ட் ஏற்பட்டது. அதாவது அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் ஓ பன்னீர் செல்வமும் தங்கள் தரப்பில் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படும் என அறிவித்தார். இதுமட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் கமலாலயம் சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள், பொறுப்பாளர்களை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரினார்.
காலம் தாழ்த்திய பாஜக
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பாஜக சார்பில் தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டதால் அக்கட்சி வேட்பாளரை நிறுத்தலாம் என கூறப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரின் நடவடிக்கையால் மாறிப்போனது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மேற்கொண்டு பாஜக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பதில் பாஜகவுக்கு குழப்பம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி முக்கியம் என்பதால் இதில் அதீதிவிரமாக பாஜக கவனம் செலுத்தி வருகிறது. இருப்பினும் நேற்று கூட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தின் முடிவில் பாஜக போட்டியிட விரும்பவில்லை என்ற தகவல் மட்டுமே கசிந்த நிலையில் அக்கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.
அடுத்தடுத்து வேட்பாளர்கள் அறிவிப்பு
இந்நிலையில் தான் பாஜகவை நம்பினால் சரியாக வராது என இன்று காலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தனது வேட்பாளரை அறிவித்தார். அதன்படி வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக இன்று மாலையில் ஓ பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரும் வேட்பாளரை அறிவிப்பு செய்தார். அதன்படி தங்கள் அணி தரப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் செந்தில் முருகன் என்பவர் போட்டியிடுவதாக அறிவித்தார். இதனால் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அதிமுக பொதுக்குழு வழக்கில் தேர்தலுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்படாவிட்டால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது.
பாஜகவுக்கு சிக்கல்
இந்நிலையில் தான் தற்போது பாஜக புதிய சிக்கலை சந்தித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தரப்பு ஆதரவு கோரி பல நாட்கள் ஆகியும் பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. அதாவது அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது தொடர்பாக நாளை மறுநாள் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது. இதை பார்த்த பாஜக தனது நிலைப்பாட்டை எடுக்க காத்திருந்தது. தற்போது இரண்டு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் பாஜக தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதாவது தேர்தலில் யாராவது ஒருவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாஜக சார்பில் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி விசிட்டுக்கு பின் முக்கிய முடிவு?
இந்நிலையில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திடீரென்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட முக்கிய தலைவர்களை அவர் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அதிமுகவின் ஆதரவு நிச்சயம் தேவை என கட்சி மேலிடம் கருதுவதாக கூறப்படும் நிலையில் தான் இன்றைய அண்ணாமலையின் டெல்லி பயணம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை நாளை காலையில் பாஜக தலைவர்களை சந்தித்த பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தின் விசாரணையை பார்த்து பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.