Exclusive: பாஜகவிலிருந்து விலகமாட்டேன்! அண்ணாமலை நல்ல முடிவை எடுப்பார்! நம்பிக்கை தளராத டெய்சி சரண்!
சென்னை: பாஜகவிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கட்சிக்காக தொடர்ந்து உழைப்பேன் எனவும் அக்கட்சியின் மைனாரிட்டி அணி நிர்வாகி டாக்டர் டெய்சி சரண் தெரிவித்துள்ளார்.
திருச்சி சூர்யா மீது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முறைப்படி நடவடிக்கை எடுப்பார் என தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
நீண்ட முயற்சிக்கு பிறகு டாக்டர் டெய்சி சரணை ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் பகிர்ந்து கொண்ட தகவல் வருமாறு;

பேச விரும்பவில்லை
''திருச்சி சூர்யா என்னை ஏன் அநாகரீகமாக பேசினார், என்ன காரணம் என்பது பற்றியெல்லாம் விசாரணை நடந்து வருகிறது. நிச்சயம் அவர் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதனால் இப்போதைய சூழலில் அது பற்றி மீடியாவிடம் மீண்டும் நான் பேசினால் அது முறையாக இருக்காது. தயவு செய்து புரிந்துக்கொள்ளவும்.''

அண்ணாமலை மீது நம்பிக்கை
''எங்க தலைவர் அண்ணாமலை முறைப்படி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை முழுமையாக எனக்கு உள்ளது. இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை அவர்கள் விரைவில் பேசுவார் என்பதால், அதற்கு முன்னர் நான் பேசுவது சரியாக இருக்காது. திருச்சி சூர்யா பற்றி மேற்கொண்டு தற்போதைய சூழலில் நான் எதுவும் பேச விரும்பவில்லை. அதனால் அதைப்பற்றி கேட்க வேண்டாம்.''

பாஜகவிலிருந்து விலகமாட்டேன்
''ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், பாஜகவிலிருந்து நான் விலகும் பேச்சுக்கே இடமில்லை, தொடர்ந்து கட்சிக்காக உழைப்பேன். இது 200% உண்மை. பிரதமர் மோடியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் காரணமாக தான் பாஜகவில் இணைந்தேன்.'' இவ்வாறு பாஜக பெண் நிர்வாகி டாக்டர் டெய்சி சரண் ஒன் இந்தியா தமிழிடம் தெரிவித்தார்.

மிகுந்த தயக்கம்
நேற்று வரை ஊடகங்களுக்கு பேட்டியளித்தும் தனது கருத்தை வெளிப்படையாகவும் கூறி வந்த டாக்டர் டெய்சி சரண், திருச்சி சூர்யாவுடனான மோதல் பற்றி தாம் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை என இன்று கூறுவது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் டூ அரசியல்வாதி
கோவையிலும்,சென்னையிலும் மருத்துவமனைகள் நடத்திக்கொண்டு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் டெய்சி சரண், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தான் பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாஜகவில் இணைந்த தருணத்தில் அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கெல்லாம் அசராமல் விளக்கங்களை கொடுத்துவிட்டு பாஜகவில் தீவிரமாக செயலாற்றி வந்தார்.

பிரதமர் மோடி
யூடியூப்களில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வரும் டாக்டர் டெய்சி சரண், மத்திய அரசின் திட்டங்கள், பிரதமர் மோடி முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றியெல்லாம் விளக்கம் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே டெய்சி சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இவர் அளித்திருக்கும் புகார் மீது பாஜக தலைமை என்ன முடிவெடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications