அரசு கட்டுப்பாட்டிலிருந்து இந்து கோயில்களை விடுவிக்க போராட்டம்.. பாஜக சுப்பிரமணியன் சுவாமி அறிவிப்பு
சென்னை: மசூதி, தேவாலயங்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லாத போது இந்து கோயில்கள் மட்டும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் எஸ் வேதாந்தம் எழுதிய மனதோடு பேசுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ராஜ்யசபாவின் முன்னாள் எம்பியும் பாஜக மூத்த நிர்வாகியுமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில் இந்து ஒற்றுமை குறித்த பிரச்சினை நாட்டில் உள்ளது.
சீனாவில் கொரோனா அதிகரித்துள்ளதே.. தமிழக பிளான் என்ன.. மா.சுப்பிரமணியன் விளக்கம்

ஆர்ப்பாட்டம்
அனைத்திற்கும் ஆர்ப்பாட்டம் செய்து நீதிமன்றம் சென்றுதான் வெற்றி பெற வேண்டிய சூழல் உள்ளது. 80 சதவீத இந்துக்கள் உள்ள நாட்டில் ராம் சேதுவை காப்பாற்ற நீதிமன்றங்கள் தேவைப்படுகின்றன. கோயிலை விடுதலை செய்யவும் , கோயிலுக்குள் பிரவேசம் செய்யவும் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மசூதி
மசூதி, தேவாலயங்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் 4 லட்சம் இந்து கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோயிலை விடுதலை செய்ய மிகப் பெரிய போராட்டங்களை நாட்டில் நடத்த வேண்டும். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் வெற்றி பெற்றால் அனைத்து கோயில்களும் அரசாங்கத்தின் பிடியிலிருந்து வெளியே வரும்.

வடநாடு தென்நாடு
இந்து என்றால் வடநாடு, தென்நாடு என பார்க்க மாட்டார்கள். மூன்று கடல் எங்கு சங்கமிக்கிறதோ அதுதான் திராவிடம். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழகம் ஆகிய அனைத்தும் சேர்ந்ததுதான் திராவிடம். அது ஒரு ஜாதியோ மதமோ கிடையாது. ஆனால் மக்களை முட்டாளாக்கி திராவிடம் என்றால் வித்தியாசமான ஒரு சமுதாயம் என கூறுகிறார்கள்.

இந்துக்கள்
எனவே இதை எதிர்கொள்ள இந்துக்கள் ஒன்றாக வேண்டும். நாட்டில் இந்து மறுமலர்ச்சி அடைய நிறைய பணிகள் செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றார். இவர் கடந்த மாதம் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திராவிடம் எனும் சொல், புராணம் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது. சமஸ்கிருதத்தில் த்ரா என்பதற்கு மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி என்று அர்த்தம். வித் என்றால் அங்கு வசிப்பவர்கள் என பொருள். வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல், அரபிக் கடல் என மூன்றும் சூழ்ந்த பூமியில் வாழ்ந்த சோழர்கள் உள்ளிட்ட மன்னர்கள் எல்லாமே திராவிடர்தான். அதே சமயம் இந்துக்களும்தான்.

பாஜகவில் குழப்பம்
படையெடுப்பு, பணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கிறிஸ்துவர், இஸ்லாமியர் என மதம் மாறியவர்கள் எல்லாம் இப்போது யார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இவர்களுடைய முன்னோர்கள் மதம் மாறும் வரை இந்துக்களே . தமிழகத்திலும் பாஜக இந்து மத உணர்வுகளின் அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டுமா, கூடாதா என்ற குழப்பத்தில உள்ளது. தமிழகத்தில் உள்ளவர்கள் தாங்கள் இந்துக்கள் என்ற உணர்வோடு இதுவரை வாக்குகளை பதிவு செய்யவில்லை. இவர்களது கோயில் போன்ற பிரச்சினைகளில் கூட நான்தான் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகிறேன். அதற்காகவே இந்துக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்து எனும் அரசியலை வைத்து லாபம் தேட முடியும் என திமுக நம்புகிறது என தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.