மதுரை சித்திரை திருவிழாவுக்கு தடை... ஹரித்வார் கும்பமேளாவுக்கு அனுமதியா? கொதிக்கும் பக்தர்கள்
சென்னை: கொரோனா பரவலை முன்னிட்டு தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா கோரத்தாண்டவமாடும் சூழ்நிலையில் பல லட்சம் பேர் ஒன்று திரளும் ஹரித்வார் கும்பமேளாவுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம்? என்பது மதுரை பக்தர்களின் கேள்வி.
மதுரை சித்திரை திருவிழா, அழகர் ஆற்றில் இறங்குதல் தென்தமிழகத்தின் பிரதான பண்பாட்டு பெருவிழா. ஜாதி, மத மாச்சரியங்களுக்கு கிஞ்சித்தும் இடம்தராமல் தமிழர்களாய் ஒன்றுபட்டு பங்கேற்கும் பெருந்திருவிழா.
சித்திரை திருவிழா என்பது தென்தமிழகத்தின் ஆகப் பெரும் கொண்டாட்டங்களின் உச்சம். இத்தனை நூறாண்டுகளாக நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் எந்தவிதமான சர்ச்சைகளும் நிகழ்ந்தது இல்லை. அத்தனை லட்சக்கணக்கான பொதுமக்கள் வைகை ஆற்றில் ஒருசேர இறங்கினாலும் நெரிசலில் சிக்காமல் வீடு திரும்புவர்.
பக்தர்கள் பங்கேற்க முடியாது
இத்தகைய பண்பாட்டு திருவிழாவுக்கு கொரோனா பரவலை முன்வைத்து பக்தர்கள் பங்கேற்க முடியாத நிலை உருவாகிவிட்டது. ஒருவகையில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற போது இத்தகைய கட்டுப்பாடுகளை நாமாக பின்பற்றத்தான் வேண்டும். இதில் அரசுக்கு எப்போதும் ஒத்துழைப்பு கொடுக்கத்தான் வேண்டும். இதில் இருவேறு கருத்துகளுக்கும் இடமில்லை.
ஹரித்வார் கும்பமேளா
ஆனால் தமிழகத்தின் சித்திரை திருவிழாவில் பங்கேற்க கூட்டாது என்கிற போது வட இந்தியாவில் ஹரித்வார் நகரில் நடைபெறும் கும்பமேளாவுக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுக்கப்படுகிறது? மூர்க்க குணம் கொண்ட நிர்வாண சாதுக்களின் கூத்தடிப்புகளுடன் இந்த கும்பமேளா புனித நீராடலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.
கொரோனா கவலையே இல்லை
ஹரித்வார் தெருக்களில் நடமாடும் எவருக்கும் கொரோனா பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. இத்தனை ஆயிரம் நிர்வாண சாதுக்கள் எப்படி ஒருசேர ஹரித்வாரில் கூடுகிறார்கள்? இதற்கு காரணமே சாதுக்களின் அகாடாக்கள்தான்.
அகாடாக்களை மூட வேண்டும்
ஹரித்வார் நகரம முழுவதும் இந்த அகாடாக்கள் என்ற சாதுக்களின் அமைப்புகளுக்கான ஏராளமான மடங்கள் கட்டிவிடப்பட்டுள்ளது. வெளியில் சாதுக்களாகளாக இருந்தாலும் இந்த அகாடாக்கள் சொகுசு வசதிகளைக் கொண்டவை. அதனால் ஹரித்வார் கும்பமேளாவுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனில் இந்த அகாடாக்களை இழுத்து மூட வேண்டும்.
ஏன் இந்த பாகுபாடு?
சித்திரை திருவிழாவில் பல லட்சம் பேர் ஒன்று திரண்டால் கொரோனா கொத்தாக தாக்கும் என்கிற நியாயப்பாடு ஏன் ஹரித்வார் கும்பமேளாவுக்கு பொருந்தாது என்பதுதான் புரியாத புதிர். ஆனால் நிச்சயமாக இது மாற்றாந்தாய் மனப்பான்மை என்பதாக மதுரை பக்தர்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.