தீபாவளி பட்டாசு கடைகளுக்கு விரைவாக லைசென்ஸ்.. போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!
சென்னை : பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள வியாபாரிகளின் மனுக்களை விரைந்து முறையாக விசாரித்து அனுமதி வழங்குங்கள் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, தற்காலிக பட்டாசு கடை நடத்த அனுமதி கோரி வியாபாரிகள், விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விரைவாக விசாரித்து அனுமதி வழங்குமாறும், தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்க தேவையின்றி காலம் தாழ்த்துவது சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தீபாவளி பட்டாசு
தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுவதை முள்ளிட்டு தற்காலிக பட்டாக கடைகள் ஆங்காங்கு திறக்கப்பட்டு பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு தீயணைப்பும் துறைக்கு 7,021 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் பல்வேறு காரணங்களால் தகுதியில்லாத 518 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தற்காலிக பட்டாசு கடைகள்
தற்போது வரை 5,110 பட்டாசு கடைகளுக்கு அனுமதி கடைகளுக்கு அனுமதியளிக்கப்படுள்ள நிலையில் மேலும் விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. இது போன்ற பண்டிகை காலங்களில் விபத்துகளைத் தடுக்க தற்காலிக பட்டாசு கடைகளுக்கு கடுமையான விதிமுறைகளை அரசு அமல்படுத்தி வருகிறது. தலைநகர் சென்னையில் மட்டும் பட்டாசு கடைகள் வைப்பதற்கு 786 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

விண்ணப்பங்கள்
சென்னைக்கு அடுத்தபடியாக சிவகாசி அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் 530, சேலம் மாவட்டத்தில் 477, கோவை மாவட்டத்தில் 445 என்ற எண்ணிக்கையில் பட்டாக கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன தகுதியில்லாத 518 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 1,379 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
இந்நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பட்டாசு கடைகள் அமைப்பதற்கும் பட்டாசுகள் விற்பதற்கும் உரிமம் வேண்டி காவல்துறையிடம் வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து அரசு வகுத்துள்ள சட்ட திட்டங்களை பூர்த்தி செய்பவர்களுக்கு காலதாமதம் இன்றி பட்டாசு விற்பனை உரிமம் வழங்க வேண்டும்.

வியாபாரிகளுக்கு பாதிப்பு
உரிமம் வழங்க, தேவையின்றி காலம் தாழ்த்துவது சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பை உண்டாக்கும். மேலும் அது முறைகேட்டிற்கும் வழிவகுக்கும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் முறையான விண்ணப்பங்களுக்கு காலம் தாழ்த்தாமல் உரிமம் வழங்க இதில் தனி கவனம் செலுத்தி காவல் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்" என அவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications