கடல்ல அப்புறம்.. வீட்டிலேயே 16 அடியில் கருணாநிதி பேனா சின்னம்! திரும்பி பார்க்க வைத்த திமுக தொண்டர்!
கருணாநிதியின் பேனா சிலையை புது வீட்டில் நிறுவிய திமுக தொண்டர்
சென்னை: கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், திமுக தொண்டர் ஒருவர் தாம் கட்டிய புது வீட்டில் 16 அடி நீளம் கொண்ட கருணாநிதி பேனா சின்னத்தை நிறுவி கவனம் ஈர்த்துள்ளார்.
முழுக்க முழுக்க ஃபைபரால் தயாரிக்கப்பட்டுள்ள அந்த பேனா நினைவுச் சின்னத்தை வீட்டின் முகப்பில் நிறுவி திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் அவர்.
அதுமட்டுமல்லாமல் ''உந்தன் விரல்களில் ஒன்றாய் திகழ்ந்த எழுதுகோலாய் மாறிட ஆசை'' என்ற வாசகத்தையும் கருணாநிதி படம் பொறிக்கப்பட்ட பெயர் பலகையில் அச்சிட்டு வீட்டில் பொறுத்தியுள்ளார் அந்த திமுக தொண்டர்.
கருணாநிதியின் ஆதர்ச தலைவன் சேகுவேரா.. அலெய்டாவை சந்தித்தது என் வாழ்நாளில் பெரும்பேறு.. கனிமொழி!
கருணாநிதி பேனா
சென்னை மெரினா கடற்கரையில் ரூ.81 கோடி செலவில் 42 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படவுள்ள கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னமானது, சென்னையின் புதிய அடையாளமாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கடலில் கருணாநிதியின் பேனா சின்னம் அமைக்க கடும் எதிர்ப்புகள் ஒரு பக்கம் கிளம்பியுள்ள நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த திமுக தொண்டர் பிரபாகரன் என்பவர் தாம் கட்டியுள்ள புது வீட்டில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை 16 அடியில் நிறுவி கவனம் ஈர்த்திருக்கிறார்.
கவனம் ஈர்த்த திமுக தொண்டர்
முழுக்க முழுக்க ஃபைபர் மெட்டீரியலில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த பேனா நினைவுச் சின்னத்தின் கீழே கருணாநிதி எழுதுவது போன்ற படத்தை பொறித்து, அதில் ''உந்தன் விரல்களில் ஒன்றாய் திகழ்ந்த எழுதுகோலாய் மாறிட ஆசை'' என்ற வாசகத்தையும் இடம்பெற வைத்திருக்கிறார். தற்போது தமிழ்நாடு அரசியல் களத்தில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் தான் ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில் திமுக தொண்டரின் இந்த புதிய முயற்சி கட்சியினர் மத்தியில் கவனம் ஈர்த்திருக்கிறது.
சாய்பாபா பக்தர்
கருணாநிதியின் பேனா சிலையை நிறுவிய திமுக தொண்டர் பிரபாகரன், தனது புதிய வீட்டிற்கு 'லியோ இல்லம்' என பெயர் சூட்டியிருக்கிறார். இவர் ஒரு சாய்பாபா பக்தர் என்பது கூடுதல் தகவலாகும். கடலில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் நிறுவப்பட்டால் அதை உடைப்பேன் என சீமான் எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்த பேனா சின்னம் திமுக தொண்டரால் நிறுவப்பட்டுள்ளது. தற்போது கருணாநிதி நினைவிட கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், விரைவில் கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணிகள் அரசுத் தரப்பில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அலை வடிவில்
கருணாநிதி நினைவிடத்தில் இருந்து கடலுக்குள் பேனா சிலை அமையவுள்ள இடம் வரை கடல் அலை வடிவில் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழ்நாடு வரும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடம் என்ற பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு கலை நுணுக்கங்களுடன் கூடிய கட்டுமானப் பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.