பொதுக்குழுவில் ஆதங்கத்தை கொட்டிய ஸ்டாலின்.. சிரித்துகொண்டிருந்த பொன்முடி! சீண்டும் எதிர்க்கட்சியினர்
சென்னை: திமுக பொதுக்குழுவில் அக்கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தாம் எதிர்கொண்டுள்ள சிக்கல்களை உருக்கமாக ஆதங்கத்துடன் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த துணை பொதுச்செயலாளரான அமைச்சர் பொன்முடி கீழே உள்ளவர்களுடன் சிரித்து கொண்டிருக்கும் வீடியோவை முன்வைத்து அதிருப்தி கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னையில் நேற்று திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்வுப்பூர்வமான உரையாற்றினார். அவர் தமது உரையில் கட்சி கட்டமைப்பு, உட்கட்சி தேர்தல், லோக்சபா தேர்தல் வியூகம் என பல்வேறு பகுதிகளாக பிரித்து கொண்டு அற்புதமான பேச்சை வெளிப்படுத்தினார்.
ஒருகட்டத்தில் திமுக சீனியர்கள், அமைச்சர்கள் செயல்பாடுகளின் பேச்சுகள், அதனால் ஏற்படும் சங்கடங்கள் குறித்து உருக்கமாக முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது, மக்களிடம் பெற்றுள்ள இந்த நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதும் - இந்த நம்பிக்கையைத் தக்க வைக்க வேண்டும் என்பதும்தான் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் சொல்வதாக இளங்கோவடிகள் எழுதி இருப்பார். 'மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பமல்லது தொழு தகவு இல்' என்கிறார் இளங்கோவடிகள். எதுவந்தாலும் பொறுப்பேற்க வேண்டியவன் மன்னன்தான். எனவே அப்பதவியால் துன்பம் தானே தவிர இன்பமல்ல என்கிறார் இளங்கோவடிகள்.
பயங்கரவாத தடுப்பு படை தேவையில்லை.. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
நீங்களே இப்படின்னா நான் யாரிடம் சொல்வது?
மழையே பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். அதிகமாக மழை பெய்துவிட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். பல்வேறு பக்கங்களிலும் வரும் பன்முனைத் தாக்குதலுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவன் நான். ஒருபக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைபோல இருக்கிறது என்னுடைய நிலைமை. இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ - மூத்தவர்களோ - அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?
உங்க நன்மைக்குதான்..
நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது. உங்களது செயல்பாடுகள் கழகத்துக்கும் உங்களுக்கும் பெருமைத் தேடுத் தருவது போல அமைய வேண்டுமே தவிர சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது. பொது நன்மைக்காக மட்டுமே இதனை நான் சொல்லவில்லை, உங்களது நன்மைக்காகவும் சேர்த்தே சொல்கிறேன். பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையின் காரணமாக கழகம் பழிகளுக்கும் ஏளனத்துக்கும் ஆளானது.
இடம்தராதீங்க..
இன்றைக்கு நம் வீட்டின் பாத்ரூம், படுக்கை அறை தவிர அனைத்தும் பொது இடமாக ஆகிவிட்டது. பிரைவேட் ப்ளேஸ் என்று எதுவுமில்லை.
எல்லோருக்கும் மூன்றாவது கண்ணாகச் செல்போன் முளைத்துவிட்டது. உங்களது ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. எனவே உங்களது ஒவ்வொரு நொடியையும் கண்ணியமாகப் பயன்படுத்த வேண்டும், பணிவோடு நடந்து கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் சொற்கள் மிகமிக முக்கியமானவை. ஒரு சொல் வெல்லும். அதே போல் ஒரு சொல் கொல்லும். பிறகு மக்கள் பணியை எப்படி பார்க்க முடியும்? இப்படி நம்முடைய கவனத்தை திசை திருப்புவதுதான் எதிரிகளின் ஒரே நோக்கம். இன்றைக்கு நாம் செய்து வரும் சாதனைகளில் குறை கண்டு பிடிக்க முடியாதவர்கள் - நமது மக்கள் நலத்திட்டங்களைப் பார்த்து மலைத்துக் கிடப்பவர்கள் - கொச்சைப்படுத்துவதன் மூலமாக குளிர்காயப் பார்ப்பார்கள். அதற்கு நம்மவர்களே இடம் தந்துவிடக் கூடாது என்பதுதான் எனது பெருங்கவலை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்.
அமைச்சர் பொன்முடி
ஆனால் முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போது, சீனியர் அமைச்சர் பொன்முடி மேடையில் அமர்ந்தபடி, கீழே உள்ளவர்களுடன் ஏதோ சைகையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடக்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தார். பொன்முடியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் கடுமையாக கோபத்தை சில நிர்வாகிகள் காட்டினராம். இதனால் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சீரியஸ் நடவடிக்கை பாயலாம் என்கின்ற்ரன அறிவாலய வட்டாரங்கள்.
இதனிடையே, பொன்முடி சிரித்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி எதிர்க்கட்சி பிரமுகர்கள் விமர்சனம் செய்துவருகிறார்கள். முதல்வர் பேச்சை பொன்முடி மதிக்கவில்லையா அல்லது கவனிக்கவில்லையா என அவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் சமீபத்தில் ஓசி டிக்கெட் என்று பொன்முடி சொன்ன ஒரு வார்த்தை, திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் பேச்சால், பொன்முடி புன்முறுவலோடு அவர் கூறியதை ஏற்றுக்கொண்டார் என்று திமுக தரப்பினர் விளக்கம் அளிக்கிறார்கள்.