திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் நியமனம்.. தயாநிதி, கதிர் ஆனந்துக்கு புதிய பொறுப்பு!
சென்னை : திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்கள் திமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய அணிகளுக்கு மாநில நிர்வாகிகளை நியமித்தும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திமுக தொழில்நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி. ராஜா நியமனம்.. ஆர் மகேந்திரனுக்கு என்ன பதவி?
திமுக தலைமை அறிவிப்பு
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டு, கிளை, ஒன்றியம், மாவட்டம், மாநிலம் என அனைத்து மட்டங்களிலும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த அக்டோபரில் பொதுக்குழு கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது. பொதுக்குழுவில் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க சட்ட திட்ட விதி பிரிவுகளின்படி, அணிகளின் தலைவர், துணைத் தலைவர்கள் - செயலாளர் - இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் - உறுப்பினர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அணி நிர்வாகிகள்
சமீபத்தில், திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். நேற்று தகவல் தொழில்நுட்ப அணி, மருத்துவ அணி, பொறியாளர் அணி, அயலக அணி, சுற்றுச்சூழல் அணி உள்ளிட்ட பிரிவுகளுக்கான மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
புதிதாக 2 அணிகள்
இந்நிலையில் இன்று திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலர்களாக கௌதம சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், ஈஸ்வரப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவராக கதிர் ஆனந்த் எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்நிலை செயல் திட்டக்குழு
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
உறுப்பினர்கள்
மேலும், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக ஆற்காடு வீராசாமி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதி மாறன், சுப.தங்கவேலன், எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், கரூர் கேசி பழனிசாமி, கோவை மு.கண்ணப்பன், எல்.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி சிவா, எவ வேலு, பொன் முத்துராமலிங்கம், ஜெகத்ரட்சகன், முபெ சாமிநாதன், எல்.மூக்கையா, திருச்செங்கோடு கந்தசாமி, கும்மிடிப்பூண்டி கி.வேணு, பெ.குழந்தைவேலு, குத்தாலும் பி.கல்யாணம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.