உதயநிதியை வாழ்த்திய மதன் கவுரி.. நன்றி சொன்ன திமுக ராஜீவ்! தகர்ந்த “சீக்ரெட்” -அப்போ அந்த துறை தானா?
சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் அவருக்கு வழங்கப்படும் துறை குறித்து வெளிப்படையாக பதிவிட்டுள்ளார் திமுக செய்தித்தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி.
திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், தனக்கு கட்சி
பதவி கிடைப்பதற்கு முன்பே சில ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் தன்னை தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகிறார்.
அதிலும், குறிப்பாக தான் செயலாளராக பதவி வகித்து வரும் இளைஞரணியில் ஆட்களை சேர்க்கும் பணியில் முழு மூச்சாக இறங்கி 30 லட்சத்துக்கும் அதிகமானோரை திமுகவில் இணைத்தார் உதயநிதி ஸ்டாலின்.

சட்டசபை தேர்தல்
கட்சி மற்றும் மக்கள் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கவர்ந்த உதயநிதிக்கு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வாய்ப்பு கிடைத்தது. சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி போட்டியிட்ட அவர் களத்தில் இறங்கி வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் பிரச்சாரம்
அந்த தேர்தலில் தொகுதி வாரியாக சென்று திமுகவுக்காக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தை கையில் எடுத்த அவர், ஒற்றை செங்கல்லோடு மத்திய பாஜக அரசையும் அதன் கூட்டணி கட்சியாயான அதிமுகவையும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.

அமைச்சராக்க கோரிக்கை
இப்படி மக்களை கவர்ந்து அவர் தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில், அமைச்சராக்க வேண்டும் என கடந்த ஆண்டிலிருந்தே திமுக அமைச்சர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வந்தார். உதயநிதி மீது வாரிசு அரசியல் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்ததால் ஸ்டாலின் பொறுமையோடு இருந்ததாக கூறப்பட்டது.

பதவியேற்பு விழா
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகப்போவதாக செய்திகள் அதிகளவில் பகிரப்பட்டு வந்தன. இந்த நிலையில் அதனை உறுதிபடுத்தியது நேற்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு. அதில், "உதயநிதியை தமிழ்நாடு அமைச்சராக்க சம்மதம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பரிந்துரை செய்து இருந்தார். இதனை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி காலை 9:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் உபதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

எந்த துறை?
அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்ற பேச்சுக்களும் எழுந்தன. மு.க.ஸ்டாலின் பதவி வகித்த உள்ளாட்சித் துறை அவருக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக திமுகவினர் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் இருக்கும் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

உடைத்த ராஜீவ் காந்தி
இதுவரை அவருக்கான துறை எது என்ற உறுதியான தகவல் வெளியாகாத நிலையில் திமுக செய்தித் தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி அந்த ரகசியத்தை ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த மதன் கவுரி, "உங்கள் பதவிகாலம் தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு கவனம் கிடைக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்த ராஜீவ் காந்தி, "அரசியல் கடந்து உங்கள் பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி!! உறுதியாக தமிழ்நாடு விளையாட்டு துறை சிகரம் தொடும்!!" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications