போகியில் பழையதை எரிக்காதீர்கள்..புகையை தடுக்க சென்னை மாநகராட்சியின் பலே ஐடியா!
சென்னை: போகி பண்டிகையன்று பழைய பொருட்களை எரிக்கக் கூடாது என சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. பழைய துணி, டயர், டியூப், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை தடுக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தேவையில்லாத பொருட்களை எரிப்பதை தடுக்கும் வகையில் அதை தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்க அறிவுரை வழங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகையின் முந்தைய நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படும். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் ஆண்டு தோறும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
போகம் என்ற சொல்லிற்கு அதிபதியாக விளங்குபவர் இந்திர பகவான். விவசாய மக்களுக்கு விவசாயம் செய்யும் நேரத்தில் மழையை பொழிகின்ற இந்திர பகவானை சிறப்பிக்கும் விதமாக போகி பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப் பட்ட பழைய பொருட்களை போகிப் பண்டிகையின்போது தீயிட்டு கொளுத்தி வந்தனர். ஆனால் இன்றைய சூழலில் போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருட்கள் , ரப்பர் பொருட்கள் போன்றவற்றை எரிப்பதினால் நச்சு மிகுந்த ரசாயன வாயு அதிலிருந்து வெளியேறுகிறது.

இதனால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு தாமதம் ஆகிறது. சென்னை நகரை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆண்டும் போகியன்று ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு இந்த நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
இதனைத் தவிர்ப்பதற்காக பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் ட்யூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிக்கக் கூடாது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டுதோறும் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி இந்த ஆண்டு புது முயற்சியை எடுத்துள்ளது. புகையில்லாத போகியை கொண்டாடும் வகையில் மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி பண்டிகையின்போது பொதுமக்கள் பொருட்களை எரிப்பதால் காற்று மிகவும் மோசடைந்து மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக அதிகாலை எரிக்கப்படும் துணிகள், டயர், டியூப், பிளாஸ்டிக் போன்ற நச்சு பொருட்களால், காற்றில் நச்சு நுண் துகள்கள் அதிகளவில் படிந்து, காற்று மாசை ஏற்படுத்துகிறது.
அந்த காற்றை சுவாசிக்கும் ஆஸ்துமா நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் மூச்சுத்திணறல் போன்றவற்றால் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், புகைமூட்டத்தால் விமான போக்குவரத்து முதல் சாலையோர போக்குவரத்து வரை பாதிக்கப்படுகிறது. இவற்றை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி முதன் முறையாக, புது முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேவையற்ற நிலையில் உள்ள டயர், டியூப், துணிகள், பிளாஸ்டிக் பொருட்களை, மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்கலாம். அந்த பொருட்களை பெறும் பணி நாளை முதல் துவங்குகிறது.
சென்னையில் ஒன்று முதல் 15 மண்டலங்களில் உள்ள, அனைத்து வார்டுகளிலும் வரும் 14ம் தேதி போகி பண்டிகைக்காக, பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் டியூப், பிளாஸ்டிக் ஆகிய பொருட்களை எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குப்பை சேகரிக்கும் வாகனங்களில் ஜனவரி 7 முதல் ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள், தங்கள் வீடுகளில் எரிக்க நினைக்கும் பொருட்களை மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் நாளை முதல் வழங்கலாம்" என்று மாநகராட்சி தலைமை பொறியாளர் மகேசன் கூறியுள்ளார்.
இதில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை, ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் பயன்படுத்த கொடுக்கப்படும். மேலும், பயன்படுத்த முடியாத பொருட்கள், மணலியில் உள்ள, இன்சினரேட்டர் ஆலையில் எறியூட்டப்படும். இந்த ஆலையில் எறியூட்டும் பொருட்களில் புகை மண்டலமாக வெளியே வராது. சாம்பலாக மட்டுமே கிடைக்கும். அந்த சாம்பலும் பேவர் பிளாக் கற்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், சென்னையில் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேவையற்ற நிலையில் உள்ள பொருட்களை மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்கி, மாநகராட்சியின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications