Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காத்திருக்கும் 2 சோதனைகள்.. ஸ்டாலினுக்கு சவால்.. இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா தொண்டர்கள் குமுறல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல் சட்டமன்ற இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதியில் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தல் முதலமைச்சர் ஸ்டாலினின் இத்தனை மாத ஆட்சிக்கு வைக்கப்படும் பரீட்சையாகவே பார்க்கப்படும். குறிப்பாக, இந்த இடைத்தேர்தல் ஸ்டாலினுக்கு 'இரட்டை பரீட்சை' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஒன்று, பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆட்சி மீது திருப்தி இருக்கிறதா என்பது. மற்றொன்று, திமுக 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆட்சி பொறுப்பெற்ற பின்னர் திமுக தொண்டர்கள் திருப்தி அடைந்திருக்கிறார்களா என்பது.

திமுக ஆட்சிக்கு வந்தும், தங்களுக்கு பயனில்லை என திமுக தொண்டர்கள் மத்தியில் அவ்வப்போது எழுந்து வரும் குமுறல், இந்த இடைத்தேர்தலில் பிரதிபலிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

முதல் சோதனை

முதல் சோதனை

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். அவரது மறைவு அரசியல் கட்சித் தலைவர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மறைவு காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்னும் சில மாதங்களில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறவுள்ள முதல் சட்டமன்ற இடைத்தேர்தல் இது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

திமுகவில் குமுறல்கள்

திமுகவில் குமுறல்கள்

திமுக 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்ததால் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், சில மாதங்களிலேயே அவர்களின் கண்களில் ஏமாற்றங்கள் தென்படத் தொடங்கின. முந்தைய ஆட்சிக்காலத்தைப் போல, கட்சிக்காரர்களுக்கு ஒப்பந்தம், வேலைகள் என முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என திமுக தொண்டர்கள் மத்தியில் குமுறல்கள் எழுந்து வந்தன.

தொண்டர்களின் ஆதங்கம்

தொண்டர்களின் ஆதங்கம்

முந்தைய திமுக ஆட்சி காலங்களில், கட்சிக்காரர்களுக்கு வேலைகள் வழங்கப்படும். போட்டித்தேர்வு இல்லாத கடைநிலை பணிகளுக்கு, திமுக தொண்டர்களின் குடும்பத்தினருக்கோ, தெரிந்தவர்களுக்கோ வேலைகள் வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் பொருளாதார அடிப்படையில் தன்னிறைவைப் பெறுவார்கள். கட்சி மீதான பிடிமானம் எந்தக் காலத்திலும் அகலாது. கருணாநிதி ஆட்சிக் காலத்தில், கட்சிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் நோக்கத்துடனே 'மக்கள் நலப் பணியாளர்' என்ற பதவி கொண்டு வரப்பட்டது. அந்தப் பதவி திமுகவினருக்கே வழங்கப்பட்டது. அதனால் தான், அதிமுக ஆட்சி அமைந்ததுமே மக்கள் நலப் பணியாளர்கள் அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்பினார் ஜெயலலிதா.

 எப்படி வருவார்கள்

எப்படி வருவார்கள்

இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் திமுக தொண்டர்கள், பெரிதாக பலனடையவில்லை என திமுகவினரே குமுறுகிறார்கள். திமுக தொண்டர்களின் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றாமல், தேர்தல் வரும்போது மட்டும் பூத் கமிட்டிக்கு ஆள் வேண்டும் என்று போய் கேட்டால் எப்படி மதிப்பார்கள் என திமுக கிளை, ஒன்றிய நிர்வாகிகளும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்த விவகாரம் தலைமைக்கே கொண்டு செல்லப்பட்டது. அதை வைத்துத்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போது சாட்டையைச் சுழற்றினார் ஸ்டாலின்.

சாட்டை வீசிய ஸ்டாலின்

சாட்டை வீசிய ஸ்டாலின்

திமுக தொண்டர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும், தொண்டர்கள் உழைக்காமல் நாம் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது, நாளைக்கே தேர்தல் வந்தால், அதே தொண்டன் வீட்டுக்குத்தான் நீங்கள் போயாக வேண்டும். தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் செய்திதான் இனி எனக்கு வர வேண்டும் என மா.செக்களுக்கு அதிரடியாக உத்தரவு போட்டார் ஸ்டாலின். கடைக்கோடித் தொண்டன் தலைமைக்கு புகார் கொண்டு வரும் நிலை இருக்கிறது என்றால் அங்கு பணிபுரியும் நிர்வாகிகள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என விளாசினார் ஸ்டாலின்.

 கௌரவ பிரச்சனை

கௌரவ பிரச்சனை

இந்தச் சூழலில் தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் வந்தால், திமுகவினர் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் திருப்தியாக இருப்பதற்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வரும் முதல்வர், திமுக தொண்டர்கள் திருப்தியாக இருக்கிறார்களா என கவனிக்க மறந்துவிட்டார் என்றும் திமுக அபிமானிகள் கூறுகின்றனர். என்னதான் இடைத்தேர்தல் சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்தாலும், பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றாக வேண்டும் என்பது ஆளுங்கட்சியான திமுகவுக்கு கௌரவப் பிரச்சனை.

பொதுமக்கள் + திமுக தொண்டர்கள்

பொதுமக்கள் + திமுக தொண்டர்கள்

இதற்காக, திமுகவினர் சுற்றிச் சுழன்று பணியாற்றி ஆகவேண்டியது கட்டாயம். இத்தனை மாத கால ஆட்சியில் தங்களுக்கு பெரிதாக பலன் இல்லாததால் அதிருப்தியில் இருக்கும் தொண்டர்கள் சிறப்பாக தேர்தல் பணி ஆற்றுவார்களா? திமுக தொண்டர்களின் மனதைக் குளிர வைக்குமா தலைமை? என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது. இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுகவுக்கு 'மக்கள் + திமுக தொண்டர்கள்' என இருவரையும் திருப்தி செய்திருக்கிறதா என்பதற்கான இரட்டை டெஸ்ட் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+