Spotlight: மெரீனா பீச் லூப் சாலையில் பாலம்.. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு.. என்ன காரணம்?
சென்னை: சென்னை மெரினா கடற்கரை -பெசன்ட் நகர் இடையே போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் செல்லும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது பற்றி மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
Recommended Video
சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தீவிர முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா -ஓர்லி கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் போல் சென்னையில் அமைக்க சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு
தவிப்பு
சென்னை மெரினா கடற்கரை சாலை முதல் பெசன்ட் நகர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சாந்தோம், எம்.ஆர்.சி. நகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளை கடக்க பல மணி நேரங்கள் ஆகிவிடுகின்றன. அதிலும் குறிப்பாக பீக் -அவர் எனப்படும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், அதே போல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கேட்கவே தேவையில்லை. சென்னை கலங்கரை விளக்கம் முதல் சாந்தோம் வழியாக அடையாறு வரை குறுகிய சாலையே உள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், அமைச்சர்கள், நீதிபதிகள், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் இல்லங்கள் பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ளதால் அவர்களின் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பு போக்குவரத்து காவலர்களுக்கு உள்ளது.
மாநகராட்சி
இப்படி பல்வேறு விவகாரங்களை கருத்தில் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் சென்னை கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட் நகர் வரை கடற்கரையோர மாற்றுசாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், லூப் சாலை விவகாரத்தில் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தை காரணம் காட்டி மாநகராட்சி தரப்பில் சாக்குபோக்குகள் சொல்லக்கூடாது என நீதிமன்றம் கறார் காட்டியுள்ளது. மேலும், கடற்கரையோரம் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது பற்றி 3 வாரங்களில் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அது தொடர்பாக திட்ட மதிப்பீடு மற்றும் திட்ட அறிக்கை மாநகராட்சி தரப்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
எதிர்ப்பு
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு ஆதரவும், எதிர்ப்பும் உருவாகியுள்ளது. கடற்கரையோரம் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டால் அது சென்னையின் புதிய அடையாளமாக திகழும் என்றும், இதன் மூலம் போக்குவரத்து நெரிசலின்றி நிம்மதியான பயணம் மேற்கொள்ளலாம் எனவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.ஆனால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மீனவர்கள் உட்பட ஒரு லட்சம் பேர் பாதிக்கக்கூடும் என அபாய எச்சரிக்கை விடுக்கின்றனர் Save chennai beaches அமைப்பினர். இது மட்டுமல்லாமல் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
கடற்கரையோர உயர்மட்ட சாலையை Save chennai beaches அமைப்பு எதிர்ப்பதற்கான காரணங்கள்...
- போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது - மாறாக பெசன்ட் நகர் நெருக்கடிக்குள்ளாகும்
- டுமீங்குப்பம், உலூர்குப்பம் பகுதிகளில் இருந்து மீனவர்கள் வெளியேற்றப்படுவர்
- மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படும்
- ஆமை கூடு கட்டும் வாழ்விடங்கள் சீர்குலைக்கப்படும்
- சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதி
- அரியவகை மரங்கள் அழிக்கப்படும் ஆபத்து
- கடற்கரை சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படும்
- வெள்ளநீர் கடலுக்கு செல்ல லூப் சாலை தடையாக இருக்கும்
என்பன உள்ளிட்ட பல காரணங்களை லூப் சாலை எதிர்ப்பாளர்கள் பட்டியலிடுகின்றனர்.
ஜெயலலிதா வாக்குறுதி
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் வில்பர் ஸ்மித் என்ற பன்னாட்டு மேம்பாலம் மற்றும் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவனத்தில் லூப் சாலை அமைப்பது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த நிறுவனமும் கடற்கரையோர உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், இரண்டு கட்டங்களாக பணிகளை தொடங்கவும் தயாராகி வந்தன. ஆனால் அதற்குள் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு 2011 செப்டம்பரில் இந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
பொறுமை
போக்குவரத்து நெரிசலுக்கு சாந்தோம் சாலையில் உள்ள பள்ளிகளும், கல்லுரிகளும் தான் காரணம் என்றும், பள்ளி நேரத்தையும் , கல்லூரி நேரத்தையும் 9 மணிக்கு பதில் 8 மணிக்கு மாற்றியமைத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாது எனவும் சென்னை கடற்கரை பாதுகாப்பு குழுவினர் யோசனை தெரிவிக்கின்றனர். நீதிமன்ற அறிவுறுத்தலின் படி இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சீனிவாசபுரம், உலூர்குப்பம் ஆகிய இரண்டு மீனவ கிராமங்களும் சிதைந்துவிடும் என வேதனை தெரிவிக்கிறார் சமூக ஆர்வலரும், பேராசிரியருமான நித்யானந்த் ஜெயராமன்.
அறிவுறுத்தல்
இந்நிலையில் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் இந்த திட்டம் புத்துயிர் பெறத்தொடங்கியுள்ளது . ஆனால் அதற்கு திட்ட வரைவு தயாரிக்கப்படுவதற்கு முன்பே அதனை கடுமையாக எதிர்க்கின்றனர் சென்னை கடற்கரை பாதுகாப்பு குழுவினர். இதனால் இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகளும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.