பிடிஎஸ் ரசிகர்களுக்கு செம 'ட்ரீட்'.. சென்னையில் தொடங்கிய கொரிய கண்காட்சி.. என்ன சிறப்பு தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் முதன் முறையாக 'கொரிய வர்த்தக கண்காட்சி' சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கொரிய நாட்டின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கொரிய திரைப்படங்களுக்கும், கொரிய இசைக்கும் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த கண்காட்சியை தமிழ்நாட்டில் நடத்த திட்டமிட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், கொரிய கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் பிரபலப்படுத்தும் விதமாக இக்கண்காட்சி நடைபெறுவதாக கொரியா வர்த்தக முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில்
இந்தியாவில் கொரியா வர்த்தக முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் (KOTRA) சார்பில் ஆண்டுதோறும் 'கொரிய வர்த்தக கண்காட்சி' நடைபெறும். இவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு இக்கண்காட்சியை நடத்த சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில், கொரியா குடியரசின் துணைத் தூதரகம் மற்றும் கொரியா சுற்றுலா அமைப்பான இன்கோவுடன் இணைந்து இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சி சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யுவில் நடைபெற்று வருகிறது. இது குறித்து கொரியா வர்த்தக முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனத்தின் தமிழ்நாட்டின் இயக்குநர் ஜிஹ்வான் யூன் கூறுகையில்,

கொரிய கலாச்சாரம்
"இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் வழக்கமாக ஆண்டு தோறும் இக்கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு தமிழ்நாட்டை தேர்வு செய்துள்ளோம். 'Korean Wave: Made in Korea, loved in India' எனும் தலைப்பின் கீழ் இக்கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. பொதுவாக கொரிய கலாச்சாரம் குறித்து தமிழ்நாட்டு மக்கள் ஓரளவு அறிந்திருக்கிறார்கள். கொரிய திரைப்படங்கள், கொரிய பாடல்கள், கொரிய உணவு முறைகள் ஆகியவற்றின் மூலம் கொரிய கலாச்சாரம் ஓரளவு அறியப்பட்டிருக்கிறது. இதனை மேலும் பிரபலமாக்கவே சென்னையில் இக்கண்காட்சியை நடத்துகிறோம். அதேபோல கொரிய பொருட்களுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இல்லை.

பங்கேற்கும் நிறுவனங்கள்
எனவே கொரிய பொருட்களுக்கான வரவேற்பை அதிகரிக்கவும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இங்கு அழகு சாதன பொருட்கள், நூடுல்ஸ் போன்ற உணவுகள், எலக்ட்ரானிக் பொருட்கள், உடைகள், நகைகள் ஆகியவை பார்வைக்கும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் உணவு பொருட்களை வாடிக்கையாளர்கள் இலவசமாக சுவைத்து பார்க்கலாம். கோரிகார்ட், எஸ்கே இன்டர்நேஷனல், டாஷிங் திவா, மிராபெல் காஸ்மெட்டிக்ஸ், லைசன், கே-லவ் இந்தியா, மை ஓப்பா கொரியன் ஸ்டோர் மற்றும் போரோடிக் இண்டஸ்ட்ரீஸ் என 20க்கும் அதிகமான நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன.

எந்த தேதி வரை நடக்கிறது?
இந்தியாவும் கொரியாவும் மிக முக்கியமான வர்த்தக கூட்டாளிகள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருநாடுகளும் சுதந்திரமான வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இம்மாதிரியான கண்காட்சிகள் இருநாடுகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிக வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஈர்ப்பதே நோக்கமாகும்" என்று கூறியுள்ளார். இந்த கண்காட்சி எக்ஸ்பிரஸ் அவென்யுவில் (EA) நேற்று (நவ.17) தொடங்கியுள்ளது. இது நவம்பர் 20ம் தேதி வரை நடைபெறும். தமிழ்நாட்டில் முதன் முறையாக கொரிய வர்த்தக கண்காட்சி நடைபெறுவது இளைஞர்கள் மத்தியில் கொரிய கலாச்சாரம் குறித்த ஆர்வத்தை தூண்டும் என்று 'கொரியா வர்த்தக முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனத்தின்' தமிழ்நாட்டின் இயக்குநர் ஜிஹ்வான் யூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications