எவ்வளவு நாள்தான் இந்த அழுகிய தென்னைகளை பார்த்துட்டே உசிர கையில பிடிச்சிட்டு இருக்கிறது?
தென்னை விவசாயிகளிடன் உயிரிழப்பு பெரும் சோகத்தை தந்து வருகிறது.
Recommended Video

சென்னை: "இன்னும் எவ்வளவு நாள்தான் இந்த அழுகிய தென்னைகளை பார்த்துட்டே உசிர கையில பிடிச்சிட்டு இருக்கிறது சொல்லுங்க" என்று கேட்கிறார் அந்த விவசாயி.
கஜாவால் வீடு, வாசல், தோட்டம், துறவு, பயிர்கள் எல்லாமே போச்சு. ஆனால் தென்னை விவசாயிகள் மட்டும் தொடர்ந்து செத்து வருகிறார்கள். தொடர்ந்து மாரடைப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து தற்கொலைகள் அரங்கேறி வருகின்றன. ஏன்? என்ன காரணம்?
விவசாயி.. சும்மா பேருக்கு அழைக்கவில்லை பிள்ளை என்று. பிள்ளை என்றால் அது நிஜமான தன் பிள்ளைதான் என்று தென்னையை கருதினான். பெற்ற பிள்ளைகளை விட அதிக நம்பிக்கையை விவசாயி தென்னையில் வைக்க என்ன காரணம்?

உறவு தந்த விவசாயி
எல்லாவற்றையும் தென்னை தாங்கும் என்பதால்தான். அதனால்தான் உலகில் எத்தனையோ மரங்கள், செடிகள், கொடிகள் என கிடந்தாலும் தென்னையை மட்டும்தான் பிள்ளை என்று உறவு தருகிறான் விவசாயி.

மலர வைக்கிறான்
தென்னை மட்டும் என்ன ஜடமா? பெற்றவன் அதாவது நட்டவன் தனக்கு ஒரு வாரம் தண்ணி ஊத்தவில்லையென்றால் முகத்தை தூக்கி வைத்து கொள்ளவேண்டியது.. வாடி வதங்கி போய் கோபத்தை நட்டவன்மீது காட்ட வேண்டியது. ஐயோ என் பிள்ளை வாடி போச்சே என்று பதறி கொண்டு ஓடிவந்து தண்ணீர் இறைத்து ஊற்றி பிள்ளை முகத்தை மலர வைக்கிறான் விவசாயி.

அழுகி கிடக்கிறது
மண்ணில் புதைந்து கிடப்பது தென்னையின் வேர் இல்லை... அந்த வீட்டு விவசாயியின் எதிர்காலம், கல்யாணம், காதுகுத்து, பிள்ளைகளின் படிப்பு... இப்படி எல்லாமேதான் அடங்கி கிடக்கிறது. விவசாய குடும்பத்தின் எதிர்காலமே அந்த தென்னைதான் தாங்கி பிடித்துள்ளது. இதுதான் தற்போது நொறுங்கிபோயுள்ளது... நம்பிக்கைகள் எல்லாமே அழுகி கிடக்கும் பயிர்களோடு நாசமாய் போய்விட்டது.

குத்துயிர் குலையுயிர்
தன் பிள்ளையின் சிதிலமான உருவத்தை பார்க்க விவசாயி விரும்பவில்லை.. நேராக பூச்சி மருந்து விஷத்தை தேட ஆரம்பிக்கிறார். நேராக தூக்கில் தொங்க உத்திரத்தை நாடுகிறார். குலை குலையாகவும், பூத்தும், காய்த்தும், மலர்ந்தும் கிடந்த தன் பிள்ளை நாடி, நரம்புகளை அறுந்து, பூமிக்குள் குத்துயிரும் குலையிருமாக பார்க்க துணிவு அந்த மனதுக்கு இன்னும் வரவில்லை.

50 ஆயிரம் ரூபாய்
8 வழி சாலை போட வந்தபோது டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு சொன்னார்கள். அதற்கு தமிழக அரசு என்ன சொன்னது? 8 வழி சாலை போடும்போது தென்னை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், 50 ஆயிரம் ரூபாய் தருவோம் என்றார்கள். ஆனால் இப்போது என்ன இழப்பீடு அறிவித்துள்ளது? புயல் பாதித்த ஒரு தென்னைக்கு 600 ரூபாயாம். இவங்க ரோடு போட்டால் 50 ஆயிரம், புயல் அடிச்சிட்டு போனால் வெறும் 600 ரூபாயா என்று யதார்த்தமாக கேட்கும் தென்னை விவசாயியிக்கு ஒரு பதிலையும் யாராலும் இதுவரை சொல்லி தேற்ற முடியவில்லை.

கைகள் நடுங்குகிறது
இன்னும் எத்தனை தென்னை விவசாயிகள் உயிரை மாய்த்து கொள்வார்களோ புரியவில்லை. ஆனால் சிதறி விழுந்து உருண்டு புதைந்து கிடக்கும் ஒரு தேங்காயை எடுக்க அந்த விவசாயிக்கு கைகள் இன்னும் நடுங்கி கொண்டே இருக்கிறது!












Click it and Unblock the Notifications