ஓசியில் மஞ்சள்.. இதுதானோ... எதுவும் செய்யாமல் திமுக, அமமுகவுக்கு மவுசு ஏறுது.. காரணம் அதிமுக!
Recommended Video
சென்னை: ஓசியில் மஞ்சள் குளிப்பது என்று கிராமப் புறங்களில் சொல்வார்கள். அதுபோல, எதுவுமே செய்யாவிட்டாலும், திமுகவுக்கும், அமமுகவுக்கும் மவுசு கூடி கொண்டே போகிறது. அதற்கு காரணம் அதிமுகவின் செயல்பாடுகள்தான்!
அன்று எம்ஜிஆர் இருந்தபோதும் சரி, ஜெயலலிதா இருந்தபோதும் சரி, அதிமுக என்றாலே அடிமனதில் ஒரு உணர்வு வந்துபோகும். அதிமுக என்று மாற்று கட்சியினர் உச்சரித்தாலும் அதை மரியாதையுடனேயே வெளிப்படுத்தினார்கள்.
அந்த அளவுக்கு கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், அதன் மாண்பை குலைக்காமல் கவனத்துடன் பார்த்து கொண்டனர். ஆனால் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே இது சீர்குலைந்து சின்னாபின்னமாகி விட்டது.
முதல் பலவீனம்
ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என்றுகூட இதுவரை இந்த நாட்டிற்கு தெரியாமல் இருப்பதே அக்கட்சிக்கு முதல் பலவீனம். அமைச்சர்களின் ஊழல்கள், ரெய்டுகள் அடுத்த பலவீனம். வாயை திறந்தாலே அமைச்சர்களின் உளறல்களை கொட்டி தீர்ப்பது இன்னொரு பலவீனம், இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க மத்திய அரசை மறைமுகமாக அனுமதித்தது முதல் கஜா புயல் நிவாரணத்தை கையாளாதது வரை சொல்லிக் கொண்டே போகலாம்.
மேலும் பலவீனம்
இவ்வளவும் திமுகவுக்கும், விரைந்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் அமமுகவுக்கும்தான் சாதகமாக போய் கொண்டிருக்கிறது. ஆனால் இவ்வளவு பலவீனங்கள் ஒரு மாநில அரசுக்கு நல்லதல்ல என்றாலும், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல்களை மட்டும் உடனடியாக நடத்தி விட்டால் இது அத்தனை கறைகளும் துடைத்தெறியப்பட்டு விடும். ஆனால் ஒரு தமிழக அமைச்சர் கைதாகி சிறை செல்வது இருக்கும் பலவீனத்தை மேலும் கூட்டி உள்ளது.
சின்ன நடவடிக்கை
எத்தனையா முறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ரெய்டுகள் நடந்தும், அதற்குரிய ஆதாரங்கள், ஆவணங்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டும், பதவியிலிருந்து விலக்குங்கள் என்று அனைத்து கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை ஒரு சின்ன நடவடிக்கைகூட கட்சி தலைமை எடுக்காமல் உள்ளது. இந்நிலையில் என்றைக்கோ நடந்த ஒரு சம்பவத்துக்காக, அதுவும் நல்ல விஷயத்துக்கு போராடியதற்காக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சிறை சென்றதை அரசு அமைதியாகதான் வேடிக்கை பார்க்க முடிந்தது.
மவுசு கூடுகிறது
ஏனெனில் இது கோர்ட் உத்தரவு என்பதால் அரசு தலையிட முடியாது. ஆனால் பாலகிருஷ்ணா ரெட்டி கைது அதிமுகவுக்கு சறுக்கலை தந்தாலும், இந்த விஷயத்தினால் திமுகவுக்கும், அமமுகவுக்கும் மவுசுதான் கூடுகிறது. இந்த கட்சிகளுக்கும், பாலகிருஷ்ணா ரெட்டி கைதுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், ஆளும் தரப்பின் பாதிப்பு எதிர்தரப்பைதான் பலப்படுத்தும் என்பது பொது நியதி.
பேரிழப்புதான்
ஒரு பக்கம் மைனாரிட்டி என்ற சிக்கலுக்குள் அதிமுக நுழைகிறது, இருக்கும் கெட்ட பெயருடன் மேலும் மற்றொன்றும் சேர்கிறது. ஏப்ரல் மாதம் வரை அரசுக்கு சிக்கல் இல்லை என்றாலும், பாலகிருஷ்ணரெட்டியின் பதவி காலியானது அதிமுகவுக்கு பேரிழப்புதான்!!
அங்கு காலி.. இங்கு ஜாலி
இடைத்தேர்தலை தள்ளி வைத்ததில் அதிமுகவுக்குதான் அதிக பங்கு இருக்கிறது என்ற பேச்சு நேற்றிலிருந்து பரபரப்பாக எழுந்தநிலையில், பாலகிருஷ்ணா ரெட்டி கைதும் சேர்ந்து கொண்டதால், அதிமுக மீது அன்றிருந்த நல்லெண்ணம் இன்று காணாமல் போய் கொண்டிருக்கிறது. இதனால் நேரிடையாகவும், மறைமுகமாகவும் லாபம் அடைவது ஸ்டாலினும், தினகரனும்தான்! அதிமுக கூடாரம் காலியாக காலியாக... இவர்கள் இருவரும் ஜாலியாகி கொண்டே இருக்கிறார்கள்.