அவசர நிலை பிரகடனம்- சிறையில் மு.க.ஸ்டாலின் அனுபவித்த கொடுமைகள்-விவரிக்கும் இஸ்மாயில் கமிஷன் அறிக்கை
சென்னை: இந்திரா காந்தி பிறப்பித்த அவசரநிலை பிரகடனத்தின் போது தமிழகத்தில் திமுகவும் அதன் தலைவர்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுகவின் ஆட்சியே கலைக்கப்பட்டது. இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவசரநிலை பிரகடனத்தால் சிறைப்படுத்தப்பட்டு கொடூரமாக தாக்குதலுக்குள்ளாக்கி மரண வாயிலுக்குப் போய்வந்ததை மறைந்த மேயர் சிட்டி பாபு தமது டைரி குறிப்புகளில் வரலாற்று ஆவணமாக பதிவு செய்துள்ளார்.
அத்துடன் ஜஸ்டீஸ் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் அறிக்கையும் அவசரநிலை கால கொடுமைகளை விவரித்துள்ளது. அதில், 29 ஆம் பக்கத்தில் இறந்த முன்னாள் மேயரும், எம்.பி.யுமான சிட்டிபாபு, அவசரநிலை பிரகடன காலத்தில் சிறையில் அனுபவித்த கொடுமைகள் தொடர்பாக எழுதிய டைரியில் உள்ளதையும் ஜஸ்டீஸ் எம்.எம்.இஸ்மாயில் பதிவு செய்துள்ளார்.
கண்ணை மறைத்த பேராசை.. எஸ்ஐயுடன் 15 வயது மகளை அனுப்ப ரூ 1 லட்சம்.. அதிர வைக்கும் மாதவரம் பெண்!
அடித்தே கொன்றிருப்பார்கள்..
இஸ்மாயில் கமிஷன் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாவது: அவர் (மறைந்த முன்னாள் சென்னை மேயர் சிட்டிபாபு), திரு.எம்.கே.ஸ்டாலினை அடித்தது குறித்து எழுதுகிறார். ஸ்டாலினை அடித்தே கொன்றிருப்பார்கள் என்று கருதியதாகக் கூறினார்.
குறுக்கே பாய்ந்த சிட்டிபாபு
மேலும், அவர் தொடர்கிறார்: ''ஏனையோர் தரையில் படுத்துக் கிடந்தனர். அவர்கள் உதவிக்காக எழுந்து வர முடியாத நிலையில் இருந்தனர். ஏனெனில், வந்தவர்கள் எமதூதர்கள். உடனே நான் ஒரு முடிவுக்கு வந்தேன். உடனே, நான் என் தம்பியைத் தள்ளிக் கொண்டு குறுக்கே ஓடினேன்.
சம்மட்டியால் அடிப்பது போல...
தடி அடிகள் என் கழுத்தில் விழுந்தன. அவை, அடி களே அல்ல! கொல்லன் உலைக் களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பின்மீது சம்மட்டி கொண்டு அடிப்பதைப் போன்று அவை இருந்தன. அவை என் கழுத்தில் சம்மட்டிக் கொண்டு தாக்குவதைப் போல் விழுந்தன. இந்தக் கொடுமைகளைத் தாங்கிக் கொண்ட பின்னர், என் அரு மைத் தம்பியை அறைக்குள் தள்ளிக் கொண்டுவர என்னால் முடிந்தது.
ஆற்காடு வீராசாமி
இச் செயல் எனக்கு நிம்மதியைத் தந்தது. இதேபோல, அவர்கள் வீராசாமியைத் (ஆற்காடு வீராசாமி) தூக்கி, ஒரு குத்துவிட்டு அறைக்குள் தள்ளினர். நீலம் மூச்சு விடத் திணறினார். அவர் வி.எஸ்.ஜி.க்கு முன்னதாக அறைக்குள் தள்ளப்பட்டார். ஸ்டாலின் இந்த அடிகள் எல்லாவற்றையும் மறந்து, அவரது உடன்பிறப்புகள் போன்றவர்கள் அறைக்குள் வர உதவினார். அவர்கள் தரையில் படுக்க அவர் தனது மேல் துண்டை விரித்தும் போட்டார்.
தாக்கப்பட்ட வீரமணி
திரு.ஸ்டாலின், தம்மிடம், தன்னைப் பற்றி என்னென்ன கேட்டறிந்தார் என்றும், தான் எவ்வாறு அவருக்கு ஆறுதல் அளித்தார் என்பதையும் தொடர்ந்து திரு.சிட்டிபாபு கூறியுள்ளார். திரு.வீரமணியின் (இன்றைய திராவிடர் கழகத் தலைவர்) முகம், அவர் பட்ட அடிகளின் காரணமாக வீங்கி இருந்தது என்றும், திரு.என்.எஸ். சம்பந்தம் (தி.க.) அடி யின் காரணமாக முன்பு ஆபரேஷன் செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் வலி எடுப்பதாகக் கூறியதையும் இந்த டைரி புத்தகம் குறிப்பிடுகிறது என்கிறது இஸ்மாயில் கமிஷன்.
சிட்டிபாபு டைரியில் எழுதியது என்ன?
சிட்டி பாபு தமது டைரி பக்கத்தில் அருகே என் அன்புத் தம்பி, ஆமாம். ஸ்டாலின்தான். தமிழகத்து முதலமைச்சரின் மகன் என்று நேற்றுவரை அறியப்பட்டவர். சுருளிராஜன் என்ற காவலன் அவனது முகத்தில் எட்டி உதைத்தான். தம்பியின் அழகிய முகத்தை அவன் சுவைத்துப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறான். அடுத்து ஒரு கொலைகாரன் லத்திக் கம்பால் ஸ்டாலினின் தோள்பட்டையைத் தாக்கினான். காக்கி உடை அணிந்த வார்டன் ஒருவன் தம்பியின் கன்னத்தில் அறைந்தான். இந்த சண்டாளர்கள் தம்பியை அடித்தே கொன்று விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது. மற்றவர்களோ மண்ணுடன் சாய்ந்துக் கிடந்தார்கள். அவர்கள் தம்பிக்கு உதவுவதற்கு எழவும் முடியாது. அப்படி எழ முடிந்தாலும் அவர்களை அருகில் நிற்க எமகாதகர்கள் அனுமதிக்க மாட்டார்கள். என்ன செய்வது? எனக்கு ஒரு துணிச்சல் பிறந்தது. திடீர் என்று குறுக்கே பாய்ந்தேன். தம்பி ஸ்டாலினை அறைக்குள் தள்ளிவிட்டேன். என் கழுத்தின் மீது சராமரியாக அடிகள் விழுந்தன. தம்பி ஸ்டாலின் தான்பட்ட அடிகளை மறந்துவிட்டான். நெடுமரமாய் வீழ்ந்துவிட்ட எங்களை அவன் முழுமையாக அறைக்குள் அழைத்துச் சென்றான் "என விவரித்துள்ளார்.