மின்கட்டண உயர்வை மறைக்க ரெய்டு.. காரணத்தோடு வந்த ஜெயக்குமார்.. கடும் தாக்கு
சென்னை: காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதிமுகவை ஒழித்து விட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் செயலாற்றுகிறார் என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். மின்கட்டண உயர்வை மறைக்கவே ரெய்டு நாடகம் போடுவதாகவும் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்பான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் மீது ஏற்கனவே, குட்கா சட்டவிரோத விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சி.விஜயபாஸ்கர்
இந்நிலையில், சி.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது, ஊத்துக்கோட்டை, மஞ்சக்கரணை என்ற பகுதியில் மருத்துவமனையே கட்டப்படாத நிலையில், வேல்ஸ் கல்லூரி மற்றும் மருத்துவமனை, 250 படுக்கை வசதிகளுடன் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு மருத்துவமனை தகுதியானது எனவும் சான்றிதழ் வழங்கியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.பி. வேலுமணி
ஒரே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் தொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரு முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் , மூன்றாவது முறையாக இந்த சோதனையானது நடத்தப்படுகின்றது. அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஒப்பந்தங்களில் முறைகேடு
இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.வும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கிராமப்புரங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது மிகப் பெரிய அளவில் முறைகேடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் கண்டனம்
ஏற்கனவே இரு முறை எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் , தற்போது மூன்றாவது முறையாக இந்த சோதனையானது நடத்தப்படுகின்றது. இதேபோல், முன்னாள் அமைச்சர், சி.விஜயபாஸ்கர் தொடர்பான 13 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனைக்கு அதிமுகவில் இருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

ஜெயக்குமார் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் தடுக்கவே அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் திமுக அரசு சோதனை நடத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதிமுகவை ஒழித்து விட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் செயலாற்றுகிறார். எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்க நினைக்கின்றனர் காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகின்றனர். மின்கட்டண உயர்வை மக்கள் மறக்க ரெய்டு நடத்தப்படுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications