திமுகவோடு ஐக்கியம் ஆகிட்டாரு ஓபிஎஸ்.. இப்போ மகன் நன்றிக்கடன் செலுத்துறாரு.. விளாசிய ஜெயக்குமார்!
சென்னை : திமுகவுடன் ஐக்கியமான ஓ.பன்னீர்செல்வத்தின் அருமை மைந்தன் ஓ.பி.ரவீந்திரநாத், அதிமுக திட்டத்தை மூடிய, திமுக அரசுக்கு மனப்பூர்வமாக பாராட்டு தெரிவிக்கிறார் என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் எல்லோரும் ஸ்டாலினோடு போய் சேர்ந்துவிடுங்கள். அங்கு போய் ஒற்றுமையாகச் செயல்படுங்கள் எனக் கூறியுள்ளார் ஜெயக்குமார்.
தனது அப்பாவுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும் திமுகவுக்கு ஓபிஎஸ் மைந்தன் ஓ.பி.ரவீந்திரநாத் நன்றிக்கடன் செலுத்துகிறார் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

திமுக அரை பாராட்டிய ஓபி ரவீந்திரநாத்
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட 'தாலிக்குத் தங்கம்' திட்டத்தை மாற்றி 'புதுமைப்பெண்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதுகுறித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் அதிமுக எம்.பியுமான ஓபி ரவீந்திரநாத், திமுக அரசு அறிவித்துள்ள மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

அதிமுக திட்டங்களுக்கு மூடுவிழா
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஈபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், "அதிமுக அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் மூடுவிழா நடத்துகிறது திமுக அரசு. புதுமைப் பெண் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கு, அதிமுக அரசு செயல்படுத்திய தாலிக்குத் தங்கம் திட்டத்தையே செயல்படுத்தலாமே? அதே டிகிரி படிக்கும் பெண்கள் தானே திருமணம் ஆகும்போது 50,000 மற்றும் தாலிக்குத் தங்கம் உதவியைப் பெறப்போகிறார்கள். அது பெரிதா, இப்போது 1000 ரூபாய் பெறுவது பெரிதா?

திமுகவோடு ஐக்கியமான ஓபிஎஸ்
அதிமுக திட்டம் என்பதால், அதை மாற்றுகிறார்கள். அதையும் ஒருவர் புகழ்கிறார். திமுகவுடன் ஐக்கியமான ஓ.பன்னீர்செல்வத்தின் அருமை மைந்தன் ஓ.பி.ரவீந்திரநாத் திமுக அரசுக்கு மனப்பூர்வமாக பாராட்டு தெரிவிக்கிறார். பேசாமல், நீங்கள் திமுகவோடே போய் சேர்ந்துவிடுங்கள். சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் எல்லோரும் ஸ்டாலினோடு போய் சேர்ந்துவிடுங்கள். அங்கு போய் ஒற்றுமையாகச் செயல்படுங்கள்.

நன்றிக்கடன்
எப்படிப்பட்ட திட்டமிட்ட மூடிவிட்ட அரசை, இப்படி பாராட்டுகிறார்கள் என்றால் இதைவிட ஜெயலலிதாவுக்கு செய்கிற துரோகம் இருக்க முடியாது. தனது அப்பாவுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும் திமுகவுக்கு ஓபிஎஸ் மைந்தன் நன்றிக்கடன் செலுத்துகிறார். அதற்காகத்தான் வாழ்த்துப்பா பாடும் நிலைக்கு ரவீந்திரநாத் வந்திருக்கிறார்.

திராவிட மாடல்
திராவிடம் என்கிற அருமையான பெயரை குட்டிச் சுவராக்கி வருகிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்றால் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால், ஒழுங்கீனமாக, சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடக்கிறது. எல்லா வகையிலும் மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் ஒரு ஆட்சியை நடத்தி விட்டு திராவிட ஆட்சி என கூறுகிறார்கள். திராவிடம் என்றாலே கேலி செய்யும் அளவுக்கு ஆக்கிவிட்டது இந்த திமுக அரசு." என விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications