“ஐ அம் சாரி”.. நான் சங்கி, உபி, தம்பி இல்ல! பிபிசி ஆவணப்பட சர்ச்சை பற்றி மதன் கவுரி விளக்கம்
மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் பற்றி வெளியிட்ட வீடியோவுக்காக மன்னிப்பு கேட்ட யூடியூபர் மதன் கவுரி, நான் சங்கியோ உபியோ தம்பியோ இல்லை என்று கூறி உள்ளார்
சென்னை: குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற மதக்கலவரத்தின் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீடு இருந்ததாக பிபிசி 2 பாகங்களாக வெளியிட்டுள்ள ஆவணப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யூடியூபர் மதன் கவுரி பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் மன்னிப்பு கேட்டு அவர் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
சர்வதேச அளவில் பிரபலமான பிபிசி தொலைக்காட்சி "இந்தியா: தி மோடி குவெஸ்டீன்" என்ற பெயரில் 2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியின் பங்கு இருப்பதாக கூறி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.
இதற்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், அதை எதிர்த்து பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆவணப்படத்தை பார்க்கும் போராட்டங்களை மாணவர் அமைப்புகள் நடத்தின.

மதன் கவுரி வெளியிட்ட வீடியோ
இந்த நிலையில் பிரபல யூடியூபரான மதன் கவுரி "மோடி அரெஸ்ட் பிபிசி" என்ற தலைப்பில் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், தான் வெளியிட்ட பிபிசி ஆவணப்படத்தை பார்க்கவில்லை என்று கூறினார். ஆனால் குஜராத் மதக்கலவரத்தில் பலர் கொல்லப்பட்டு இருந்தாலும் உள்நாட்டு விவகாரத்தில் பிறர் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று அவர் பேசி இருந்தது சர்ச்சைக்கு உள்ளானது.

கடும் விமர்சனம்
யூடியூபில் சிரியா, பாகிஸ்தான், வட கொரியா, அமெரிக்கா, ரஷியா, சீனா, என பல நாடுகளை பற்றி பேசிய வீடியோ வெளியிட்ட மதன் கவுரி இதை எப்படி எதிர்க்கலாம் என பலரும் கடும் கேள்விகளை எழுப்பி அதிருப்தி தெரிவித்து இருந்தனர். மதன் கவுரியை விமர்சித்து மீம்களும் பகிரப்பட்டன. மதன் கவுரியின் யூடியூப் சேனலை அன் சப்ஸ்கிரைப் செய்வதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

ட்விட்டரில் மன்னிப்பு
இந்த நிலையில் மதன் கவுரி நேற்று ட்விட்டரில், "நான் வெளியிட்ட ஒரு வீடியோ என்னை பின் தொடரும் பலரை காயப்படுத்தி இருப்பதை புரிந்துகொள்கிறேன். உங்களின் கருத்துக்களை படித்தேன். உங்களை காயப்படுத்தியதற்கு தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். வீடியோவை நீக்கிவிட்டேன். எதிர்காலத்தில் இனிகவனமாக இருப்பேன். அனைவருக்கும் என் அன்பு." என்று கூறினார்.

ஐ அம் சாரி
இந்த நிலையில் ஐ அம் சாரி என்ற தலைப்பில் வீடியொ ஒன்றையும் மதன் கவுரி வெளியிட்டு இருக்கிறார். "நான் பேசியது பலரை காயப்படுத்திவிட்டது. ஆனால், என் நோக்கம் அதுவல்ல. தவறு செய்தவர்களை நியாயப்படுத்தவும் நான் நினைக்கவில்லை. இவ்வளவு பெயரை இது காயப்படுத்தியதால் நான் பேசியது தவறாக இருக்கும் என்ற அடிப்படையில் மன்னிப்பு கேட்கிறேன்.

பில்கிஸ் பானு பற்றி பேசினேன்
எனக்கு அரசியல் பிரச்சனை வருவது இதுவே முதல் முறை. குஜராத்தில் நடந்த கலவரத்தை நான் மூடி மறைத்ததாக சொல்கிறார்கள். குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்த 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பேசியது நான் தான். என்னை தொடர்ந்து பின்பற்றுவோருக்கு நான் யார் என்று தெரியும்.

நான் எந்த பக்கமும் கிடையாது
நியாயமான விமர்சனங்களை நான் ஏற்கிறேன். ஆனால், இதுதான் வாய்ப்பு என்று சிலர் என்னை விமர்சிக்கிறார்கள். புதுக்கோட்டையில் தலித் மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதை பற்றி நான் பேசினேன். என்னை ஏதாவது ஒருபக்கம் தள்ள நினைக்கிறார்கள். இங்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் நான் உபி, சங்கி, தம்பி என்று எதிலாவது முத்திரை குத்த நினைக்கிறார்கள். ஆனால் நான் எதிலும் சிக்க மாட்டேன்." என்றார்.












Click it and Unblock the Notifications