என்எல்சி பணி நியமனங்கள்.. 300 பேரில் தமிழகத்தை சேர்ந்தவர் ஒருவராவது இருப்பாரா? சு.வெங்கடேசன் அட்டாக்
சென்னை: நெய்வேலி அனல் மின் நிறுவனத்தில் சமீபத்தில் நடைபெற்ற பணி நியமனத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நெய்வேலி அனல் மின் நிறுவனத்தில் 300 பட்டதாரி நிர்வாக பயிற்சி பொறியாளர் நியமனங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.
அதில் கேட் மதிப்பெண்களைத் தகுதியாக மாற்றியதால் தமிழர்களால் அங்கு பணிக்குச் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஒருவர் கூட தமிழர் இல்லையா? நெய்வேலி நிலக்கரி நிறுவன பொறியாளர் நியமனத்துக்கு திருமாவளவன் கண்டனம்
சு.வெங்கடேசன் ட்வீட்
இது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில், "என்எல்சி நிர்வாகமே! 2010க்கு முன்பாக தேர்வுப் பட்டியலில் 80 % பேர் வரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றதுண்டு. 2020 இல் 5 % க்கும் கீழே போய் விட்டது. இப்பொழுது வரவுள்ள 300 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒருவராவது இடம் பெறுவாரா? பட்டதாரி நிர்வாக பயில்நர் தேர்வுகளில் GATE தேர்வு முடிவுகளை இடையில் இணைத்தது ஏன்? தேர்வு என்பது வாய்ப்பை கொடுப்பதா? பறிப்பதா?" என்று பதிவிட்டுள்ளார்,
நெய்வேலி அனல் மின் நிறுவனம்
மேலும், அவர் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெய்வேலி அனல் மின் நிறுவனத்தில் 'பட்டதாரி நிர்வாக பயில்நர்" பதவிக்கான 300 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை (எண் 02/202) எண்.எல்.சி. வெளியிட்டு இருந்தது. ஏற்கெனவே 2020இல் இதே பதவிக்கான பணி நியமனங்கள் நடைபெற்றன. ஆனால் 2022 இல் தேர்வு முறைமையில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. GATE 2022 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு பட்டியல் அமையும் என்று அறிவிக்கப்பட்டது.
கேட் 2022
GATE 2022 தேர்வுகள் தகுதியாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிந்திருந்தால் பலர் தயார் ஆகி இருப்பார்கள்; ஆனால் அதற்கான அவகாசம் தரப்படவில்லை. அறிவிக்கை மிக மிக நெருக்கு வெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே GATE 2022 எழுதாதவர்கள் தேர்வு முறைமைக்கு வெளியே நிறுத்தப்பட்டு விட்டனர். இது அநீதியானது. சமவாய்ப்பை மறுப்பது. இன்னொரு முக்கிய விசயம்.
தமிழர்
ஏற்கெனவே தேர்வுப் பட்டியலின் உள்ளடக்கம் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் கேள்விக் குறியாகி இருக்கிறது. 2010க்கு முன்பாக தேர்வுப் பட்டியலில் 80 சதவீதம் பேர் வரை கூட, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றதுண்டு. 2020 இல் 5 % க்கும் கீழே இந்த விகிதம் போய் விட்டது. இந்த தேர்வுப் பட்டியில் வெளிவந்தால் பேரதிர்ச்சியைத் தரக் கூடும். 300 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலில் ஒரு தமிழராவது இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இட ஒதுக்கீடு
நான் இன்று என்.கால்.சி தலைவர் ராகேஷ் குமார் எழுதியுள்ள கடிதத்தில்,.. அறிவிக்கை எண் 02:/2022ஐ சத்து செய்ய வேண்டும். தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டாம். மீண்டும் முந்தைய முறைமையின் அடிப்படையில் தேர்வை நடத்த வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று கோரியுள்ளேன்" என்று சாடியுள்ளார்,