"காந்தி ஒரு போர் வீரர்.. வழிபடுவது சுலபம்; வழிநடப்பதே வீரம்" கமல்ஹாசன் ட்வீட்!
சென்னை: மாற்றத்தை விரும்பினால் அதை உன்னில் இருந்து தொடங்கு என சொன்ன காந்தி ஒரு போர் வீரர் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் விடுதலைக்காக போராடிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் காந்தி ஜெயந்தியும் ஒன்றாகும்.
காந்தி ஜெயந்தி: டெல்லியில் பிரதமர் மோடி, சோனியா காந்தி மரியாதை.. சென்னையில் ஆளுநர், முதல்வர் அஞ்சலி!
பிரதமர் மோடி மரியாதை
இவரது பிறந்த நாள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
முதல்வர் ஸ்டாலின் மரியாதை
இதேபோல் காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காந்தி பற்றி கமல்ஹாசன்
இதனைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள காந்தி சிலைக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மகாத்மா காந்தி பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் ட்வீட்
அந்த பதிவில், மாற்றவேண்டுமென முடிவெடுத்து களமிறங்கிய மறுநிமிடமே நீங்கள் வாரியர். போர் வீரர். மாற்றத்தை விரும்பினால் அதை உன்னிலிருந்து தொடங்கு என சொன்ன காந்தி ஒரு போர் வீரர். இந்த உலகை மாற்றும் வல்லமை எல்லாருக்கும் இருக்கிறது என்பதுதான் காந்தியின் வாழ்வு சொல்லும் செய்தி. அவரை வழிபடுவது சுலபம். அவர் வழிநடப்பதே வீரம் என்று பதிவிட்டுள்ளார்.