என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? ‘கனிமவள கொள்ளை’ - பொன்னாருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் சவால்!
சென்னை : முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் என்னுடன் ஒரே மேடையில் செய்தியாளர்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாரா? என அமைச்சர் மனோ தங்கராஜ் சவால் விடுத்துள்ளார்.
அதிமுக, பாஜக ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 39 ஆக இருந்த குவாரிகளின் எண்ணிக்கை, திமுக ஆட்சியில் 6 ஆக குறைக்கபட்டுள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கனிமவள கொள்ளை சரித்திரத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் பெயர் முக்கிய இடத்தைப் பெறும் எனச் சாடிப் பேசியிருந்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திமுக அமைச்சர் மனோ தங்கராஜ், கடந்த ஆட்சியை போல கன்னியாகுமரியில் விதிகளுக்கு புறம்பாக எந்த குவாரிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
முறையாக ஆடை அணியும் உரிமை கூட சனாதனவாதிகளால் மறுக்கப்பட்டதே.. தமிழிசைக்கு மனோ தங்கராஜ் கேள்வி
கனிம வளம் கடத்தல் விவகாரம்
சமீபத்தில், குலசேகரம் அருகே ஒரு கல் உடைக்கும் தொழிற்சாலையில் இருந்து கேரளாவிற்கு அனுமதியின்றி கற்கள் கொண்டு செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், அனுமதியின்றி கல் உடைக்கும் தொழிற்சாலை மூலம் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு மத்திய அரசுதான் காரணம். மாநிலங்கள் இடையே கனிம வளங்களை கொண்டு செல்ல மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தடுப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறியிருந்தார்.
பொன்னார் விமர்சனம்
இதுகுறித்து சமீபத்தில் பேசிய பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட கனிமவள கொள்ளை தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியவை தவறானவை. கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு சரித்திரம். இந்த சரித்திரத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய பங்கு வகிப்பார். கனிம வள கொள்ளை வரலாற்றில் மனோ தங்கராஜ் பெயர் முக்கிய இடத்தைப் பெறும் எனச் சாடிப் பேசியிருந்தார்.
மத்திய அரசு பொறுப்பா?
மேலும், கனிம வளங்களை அழிப்பதற்கு, எந்த அரசியல் கட்சிக்கும் உரிமை இல்லை. கனிமவள கடத்தலுக்கு, மத்திய அரசு தான் பொறுப்பு என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். தமிழகத்தில் இன்று பொறுப்பில் உள்ளார்கள், அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை தவறவிட்டுள்ளனர். அமைச்சர் பொறுப்பிற்கு, மனோ தங்கராஜ் பொருத்தமில்லாதவர் என்பதை, அவரின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது என விமர்சித்திருந்தார் பொன்னார்.
39லிருந்து 6
இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார். பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக ஆட்சிக் காலத்தில் 39 குவாரிகள் செயல்பட்டு வந்தன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது 6 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. விதிகளுக்கு புறம்பாக எந்த குவாரிகளும் செயல்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மனோ தங்கராஜ் சவால்
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் எடுக்கப்படுகின்ற கனிம வளங்கள் அனைத்தும் குமரி மாவட்டத்திற்கு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கனிமவளம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? செய்தியாளர்கள் முன்னிலையில் அவருடன் விவாதிக்க நான் தயாராக உள்ளேன் என சவால் விடுத்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ்.