ரஜினி கட்சி தொடங்கி கொள்கைகளை அறிவிக்கட்டும்.. அப்புறமா கருத்து சொல்றேன்... மு.க.ஸ்டாலின்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சியை தொடங்கி கொள்கைகளை அறிவிக்கட்டும்.. அதனடிப்படையில் தாம் கருத்து சொல்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
செய்தியாளர்: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?
மு.க. ஸ்டாலின்: அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எல்லோருக்கும் ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது. கட்சி தொடங்கட்டும். அதன்பிறகு கொள்கைகளை அறிவிக்கட்டும். அதற்குப் பிறகு அதுபற்றி என்னுடைய கருத்துக்களை சொல்கிறேன்.
'கமிஷன் நாயகர்' - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை நாயகர் பட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
திமுகவுடன் கூட்டணிக்கு எதிர்ப்பா?
செய்தியாளர்: தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என்று ரஜினியிடம் தமிழருவி மணியன் சொன்னதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அதைப் பற்றி உங்களுடைய கருத்து?
மு.க. ஸ்டாலின்: எனக்கு அது போன்ற செய்திகள் வரவில்லை.
தேர்தலுக்காக
செய்தியாளர்: தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தற்போது ஒரு ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து இருக்கிறார்கள். அது பற்றி?
மு.க. ஸ்டாலின்: பத்து ஆண்டுகளாக இல்லாமல் தற்போது அறிவித்து இருக்கிறார்கள் என்றால், அதெல்லாம் தேர்தலுக்காக நடத்துகின்ற ஸ்டன்ட்; அவ்வளவுதான்!
சிறப்பான கூட்டணி
செய்தியாளர்: தி.மு.க. கூட்டணி எப்படி இருக்கிறது?
மு.க. ஸ்டாலின்: தி.மு.க. கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலின் போது எப்படி இருந்ததோ அப்படித்தான் இருக்கிறது; அதைவிட சிறப்பாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் எப்படிப்பட்ட வெற்றியை பெற்றோமோ, அதைவிட பலமடங்கு வெற்றியை சட்டமன்ற தேர்தலில் பெறுவோம்
பாரத் பந்த்- ஆதரவு
செய்தியாளர்: பாரத் பந்த் குறித்து?
மு.க. ஸ்டாலின்: இதுகுறித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். அனைத்து கட்சிகளும் அந்த பந்த்-ஐ ஆதரிக்கிறோம்.
ஆ. ராசாவின் சவால்
செய்தியாளர்: தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் முதலமைச்சரை விவாதத்திற்கு அழைத்து இருக்கிறாரே?
மு.க. ஸ்டாலின்: நாங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.
ராஜேந்திர பாலாஜி பபூன்
செய்தியாளர்: ஆனால் அதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நான் வருகிறேன், முதலமைச்சர் வரத் தேவையில்லை என்று கூறியிருக்கிறாரே?
மு.க. ஸ்டாலின்: அவர் ஒரு பபூன்! அவரைப் பற்றியெல்லாம் பேச வேண்டிய அவசியமில்லை.
ஊழல் வழக்கில் ஜெ, சசிகலா
செய்தியாளர்: அ.தி.மு.க.வினர் மீது நீங்கள் ஊழல் குற்றச்சாட்டு சொல்லும்போதெல்லாம் அவர்கள் திரும்பத்திரும்ப சர்க்காரியா கமிஷன், 2ஜி என்று கூறி திசைதிருப்பிக் கொண்டே இருக்கிறார்களே?
மு.க. ஸ்டாலின்: அதைத்தான் ராசா அவர்கள் சொன்னார். சர்க்காரியா கமிஷனில் ஏதாவது நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? எம்.ஜி.ஆர். மூலமாக போடப்பட்டது தான் சர்க்காரியா கமிஷன். அவர்தான் புகார் கொடுத்தார். அதன் பிறகுதான் அந்தக் கமிஷன் போட்டார்கள். சேலம் கண்ணன் சொன்னார் அதை வைத்து தான் நான் சொன்னேன் என்று தப்பித்து போனார். எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அதேபோல் ஸ்பெக்ட்ரம் வழக்கை பொறுத்தவரை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கப்படாதது மட்டுமல்ல, விடுதலையும் ஆகி விட்டார்கள்.
ஆனால், ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கு - சசிகலா மீது போடப்பட்ட வழக்கு - திவாகரன் மீது போடப்பட்ட வழக்கு - சுதாகரன் மீது போடப்பட்ட வழக்கு இதிலெல்லாம் தான் 4 ஆண்டு தண்டனை 100 கோடி ரூபாய் அபராதம். இதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கு. அதையெல்லாம் மறந்துவிட்டு, விடுதலையானது பற்றி கூறிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இதையெல்லாம் நிரூபிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்; தன்னந்தனியாக வருகிறேன்; கோட்டைக்கு வருகிறேன்; முதலமைச்சரை எனக்கு மூன்று நாட்களுக்குள் ‘டைம்' கொடுக்க சொல்லுங்கள் என்று சொன்னார். இதுவரை முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. இவ்வாறு ஸ்டாலின் பேட்டியளித்தார்