குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஓட்டு போட்டதால்.. ஜமாஅத் பொறுப்பிலிருந்து அதிமுக எம்பி அதிரடி நீக்கம்
சென்னை: ராணிப்பேட்டை அனைத்து ஜமாஅத் காப்பாளர் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.பி. முகமது ஜான் நீக்கப்பட்டுள்ளார். குடியுரிமை சட்ட திருத்தம், இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதை தெரிந்தும், அதற்கு ஆதரவாக ஓட்டுப் போட்டதற்காக, உறுப்பினர்கள் சேர்ந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா சமீபத்தில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவில் போதிய அளவுக்கு எம்பிக்கள் பலம் இருந்த போதிலும் கூட, ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை தாண்டிய பிற கட்சிகளின் ஆதரவு பாஜக-வுக்கு தேவைப்பட்டது.
இந்த நிலையில்தான் அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளும் குடியுரிமை கட்சிக்கு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. இதன் விளைவாக அந்த சட்டத் திருத்தம் நிறைவேறியது.
இந்த சட்டத் திருத்தத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் வந்து குடியேறியுள்ள முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும். அதேநேரம், இலங்கையிலிருந்து வந்துள்ள இந்துக்களுக்கு குடியுரிமை கிடையாது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் குறிப்பிட்டு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு, அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
குடியுரிமை சட்டம்- தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள்- சென்னையில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயற்சி!
இந்த நிலையில்தான் ராணிப்பேட்டை அனைத்து ஜமாத் காப்பாளர் பொறுப்பை, வகித்து வந்த முகமது ஜான் எம்பி, அப்பதவியிலிருந்து, நீக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டவர் ஆகும்.
முஸ்லிம்கள் பிற நாட்டிலிருந்து வந்து குடியேறி குடியுரிமை கேட்டால் அவர்களுக்கு, குடியுரிமை கொடுக்கப்பட மாட்டாது என்று சட்டத்தில் இடம் இருந்தும் கூட, அதற்கு ஆதரவாக முகமது ஜான் வாக்களித்ததால், அனைத்து ஜமாஅத் உறுப்பினர்கள் கூடி இவ்வாறு ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளனர்.