ஆ. ராசா போட்ட 5ஜி குண்டு.. டென்ஷனில் பாஜக.. "பிளேட்டை" மாற்றி நழுவிய சீமானை கிண்டலடித்த திமுக எம்பி
சீமானின் பதிலை ட்வீட்டில் பதிவிட்டு கிண்டலடித்துள்ளார் திமுக எம்பி செந்தில்குமார்
சென்னை: பாஜகவின் 5ஜி ஊழல் குறித்த கேள்விக்கு, சீமான் அளித்த பதிலை, திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் கிண்டலடித்துள்ளார்.. இதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.
5ஜி அலைக்கற்றை ஏலம், கடந்தமாதம் 26ம் தேதி தொடங்கி 7 நாட்கள் நடந்து முடிந்தது.. இந்த ஏலத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல், கவுதம் அதானி, வோடபோன்ஐடியா இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
எனவே, முதல்நாளிலேயே ரூ.1.45 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் கேட்கப்பட்டது... ஆனால், ஏலம் கேட்கும் தொகை அதன்பிறகு மிகவும் குறைவாக உயர்ந்தது.
இந்த ஏலம் குறித்து மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் சொல்லும்போது,
" 2ஜி, 3ஜி, 4ஜி ஏலத்தோடு ஒப்பிடும்போது, 5ஜி ஏலம் ரூ.5 லட்சம் கோடிக்கு விற்பனையாகும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.. அதனால் எப்படியும் ஏலத்தில் 4.30 லட்சம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், ரூ.4.30 லட்சம் கோடிக்கு 72 ஜிகாஹெட்ஸ் அலைவரிசை ஏலம் விடப்பட்டதில், வெறும் ரூ.1.50 லட்சம் கோடிதான் கிடைத்தது.
5ஜி அலைக்கற்றை அடிமாட்டு விலைக்கு ஏலம்! மோடி அரசின் மெகா மோசடி! தமிழக காங்கிரஸ் பாய்ச்சல்!
ஆ. ராசா
இப்படிப்பட்ட சூழலில்தான், திமுக எம்பியும், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரான ஆ.ராசா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "இதில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. 2ஜி அலைக்கற்றையோடு ஒப்பிடும்போது 5ஜி அலைக்கற்றை 10 முதல் 20 மடங்கு மதிப்பில் உயர்ந்தது, திறன்பெற்றது... அதை எப்படி குறைந்த தொகைக்கு ஏலம் கொடுக்க முடியும்? இந்த ஏலம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்... இந்த ஏலத்தில் எவ்வளவு மோசடிகள் நடந்துள்ளது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அப்துல்லா எம்பி
இதுகுறித்து திமுக எம்பியான எம்எம் அப்துல்லாவும் "பாஜக அரசின் இமாலய ஊழல்.. ரூ.2.80 லட்சம் கோடி ஊழல்.. பாஜக போல் பேசுங்கள். 2ஜி போல் பேசுங்கள்" என்று காட்டமாக கூறியிருந்தார்.. திமுகவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு, தமிழக பாஜகவும், பதிலடி தந்து வருகிறது.. அதிலும் வானதி சீனிவாசன், "இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு லாபத்தை நாட்டிற்கு தந்திருக்கிறது 5ஜி அலைக்கற்றை... இதை பற்றி குறை சொல்லும் ஆ.ராசாவுக்கு தான் எப்படி ஊழல் செய்யலாம் என்பது தெரியும்... பாஜகவுக்கு தெரியாது. வெளிப்படை தன்மை உடன் ஏலம் நடந்திருக்கிறது" என்று ஆ.ராசாவை விமர்சித்துள்ளார்..
கருத்தா?
இப்படி பாஜக - திமுக இரு தரப்பிலும் விமர்சனங்களும், விவாதங்களும் எழுந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ஊழல் குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். "இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நாட்டிற்கு இரண்டரை லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டிருப்பதாகவும் புகார்கள் வந்துள்ளதே, இதை பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு சீமான் திடீரென சிரித்து, "கருத்தா?" என்று கேட்டார்.
இப்பதான் தெரியுதா?
பிறகு பதிலளிக்கும்போது, "இழப்பீடு நேர்ந்திருக்கிறது என்று சொல்லும் பெருமக்கள், இவ்வளவு காலம் என்ன பண்ணிட்டு இருந்தாங்க? இழப்பீடு நேரும்வரை என்ன பண்ணிட்டு இருந்தீங்க?ன்னு கேட்கிறேன்.. இழப்பீடு நேர்ந்து, 8 வருட காலம் பாஜக ஆட்சிக்கு பிறகு, இரண்டரை லட்சம் கோடி இழப்பீடு என்று இப்பதான் தெரியுதா?" என்று திருப்பி கேட்டார்.. செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, இன்னொரு கேள்வியைதான் சீமான் திருப்பி கேட்டாரே தவிர, ஊழல், முறைகேடு பற்றி கடைசிவரை பதில் ஏதும் சொல்லவில்லை..
மிமிக்ரி
"பாஜகவின் பி டீம்" என்ற கலர், இவர்மீது தொடர்ந்து பரவலாக பூசப்பட்டு வரும் நிலையில், தன்னுடைய எல்லா மேடைகளிலும் பாஜகவையும், ஆர்எஸ்எஸ்ஸையும் கடுமையாக விமர்சித்தும் வருகிறார் சீமான்.. சில சமயம், பிரதமர் மோடி போல் மிமிக்ரியும் செய்து காட்டி கிண்டலடிப்பார்.. இப்போது, பாஜகவின் ஊழல் குறித்து கேள்வி கேட்டதால், எப்படியும் இதை பற்றி, கொந்தளித்து பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கம்போல் திமுகவிடமே, அம்பை திரும்பி விட்டுள்ளது, இணையவாசிகளை கவனிக்க வைத்துள்ளது.
Recommended Video
புரியல செந்தில்
இந்த வீடியோவை திமுகவின் எம்பி டாக்டர் செந்தில்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.. அத்துடன், "நம்ம யாருமே எதி்பார்க்காத ஓர் பதில் சொல்லுவார் பாருங்கககக...." என்றும் பதிவிட்டுள்ளார்.. இதற்கு ஏராளமான திமுகவினர் திரண்டு கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. "செந்தில் எனக்கும் புரியல!!!! வேற ஏதோ கேள்விக்கு பதில இந்த கேள்விக்கு சொல்லுரார் செந்தில் என்றும், பதில் கண்டிப்பாக வராது என்றும்" கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.
அண்ணாமலை
இதனிடையே, திமுக மற்றும் அதன் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை.. ஒவ்வொரு முறையும் திமுக மீது ஊழல் புகார்களை பாஜக சொல்லி வரும் நிலையில், இப்போது பாஜக பக்கம், திமுக பாய்ந்துள்ளது கவனத்தை பெற்று வருகிறது.. இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நீண்ட விளக்கம் அளித்திருந்தார்.. பாஜக வந்த பிறகு நடந்த முதல் ஏலத்தில் 1,09,000 கோடி ரூபாய் கிடைத்தது. 2021ல் நடந்த ஏலத்தில் 77,814 கோடி ரூபாய்தான் கிடைத்தது. இப்போது நடந்த 5ஜி ஏலத்தில் 1,50,000 லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது.. இதுவரை நடந்த அலைக்கற்றை ஏலங்களிலேயே, இந்தியாவுக்கு அதிக பணம் கிடைத்தது இந்த ஏலத்தில்தான் என்று கூறியுள்ளார்.. ஆனாலும், திமுக, காங்கிரஸ், விசிக அனைத்தும் ஒன்றுசேர்ந்து பாஜகவை கேள்வி கேட்டுள்ளது அரசியல் தளத்தில் பரபரப்பை கூட்டி உள்ளது