அய்யய்யோ.. இர்ஃபானுக்கு இப்படி பயங்கரமான தண்டனையை கொடுத்துராதீங்க.. சாட்டை துரைமுருகன் கிண்டல்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை கிண்டலாக விமர்சித்துள்ளார். இர்பான் தனது மனைவியின் பிரசவ வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், மருத்துவத்துறை விதிகளை மீறி தொப்புள் கொடியை அவரே நறுக்கி இருந்தது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
பிரபல யூடியூபரான இர்ஃபான் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனது மனைவி கர்ப்பிணியாக இருந்தபோது குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே அறிவித்து சர்ச்சையில் சிக்கினார் இர்ஃபான். இந்நிலையில் அண்மையில் மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார் இர்ஃபான்.

மேலும், பிரசவத்திற்கு முன்பான மருத்துவமனையில் நடந்தது அத்தனையையும் வீடியோவாக வெளியிட்டிருந்தார் இர்ஃபான். இர்ஃபானின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபான், மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக அரசின் மக்கள் நலவாழ்வுத் துறைது. இர்ஃபான் வீடியோவை நீக்கினாலும், அவர் மன்னிப்பு கேட்டாலும் சும்மா விடப்போவதில்லை என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இர்ஃபான் மனைவிக்கு பிரசவம் பார்த்த ரெயின்போ மருத்துவமனைக்கு 10 நாட்கள் தடை விதித்தும், ரூ.50,000 அபராதமும் விதித்து டிஎம்எஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் சிகிச்சை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், வீடியோ வெளியிட்ட இர்ஃபான் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாதது விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இர்ஃபான் தற்போது வெளிநாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இர்ஃபான், ஆளுங்கட்சியுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், இர்ஃபான் சர்ச்சை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை கிண்டலாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் தண்டனை என்பது பெயரளவிற்கு உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
"மருத்துவமனைக்கு 10 நாட்கள் புது நோயாளிகள் போகக்கூடாது என்ற கடும் தண்டனை கொடுத்தது போல இர்பான் வீடியோடிக்களை 10 நாட்களுக்கு யாரும் பார்க்கக் கூடாது, லைக் பண்ணக்கூடாது கண்டிப்பாக அவர் சேனலை யாரும் சப்ஸ்கிரைப் பண்ணக்கூடாது போன்ற கடுமையான தண்டனையை மட்டும் கொடுத்துராதிங்க!
அவர் செய்தது கடும் குற்றமாக இருந்தாலும் இது போன்ற தண்டனையை கொடுத்துராதிங்க!" என கிண்டலாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சாட்டை துரைமுருகன்.












Click it and Unblock the Notifications