திருப்பிப்போட்ட ஓபிஎஸ் டீம்.. ‘வீடியோ’.. ஆவணங்களை எடுத்துச் சென்றது ஏன்?- ஜேசிடி பிரபாகர் பதில் மனு!
சென்னை : எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அதிமுத தலைமைக் கழகத்தில் வன்முறை ஏற்பட்டதில் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. அப்போது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக வீடியோ ஆதாரங்களுடன் ஈபிஎஸ் தரப்பினர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவற்றைப் பாதுகாக்கவே எங்களது ஆதரவாளர்கள் எடுத்து வந்து ஓபிஎஸ் வாகனத்தில் வைத்தார்கள் என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜஸ்ட் 2 மாசம்தான்.. குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிதான்.. உஷாரா இருங்க..போலீசாருக்கு கெஜ்ரிவால் வார்னிங்
அதிமுக அலுவலக மோதல்
அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக சி.வி.சண்முகம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடியாட்களுடன் தடுத்தது அவர்கள்தான்
இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஜே.சி.டி.பிரபாகர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நாளன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீர்செல்வம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்ததாகவும், அடியாட்களுடன் அலுவலகம் முன் கூடிய எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களான தி.நகர் சத்யா, விருகை ரவி மற்றும் ஆதி ராஜாராம் ஆகியோர் தங்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்ததாகவும் கூறியுள்ளார்.
கொள்ளை அடிக்கப்பட்டு விடக்கூடாது
மேலும் கத்தி, பாட்டில்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு எங்களை தாக்கினார்கள். இது சம்பந்தமாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்திற்கு மத்தியில் அலுவலகத்துக்குள் உள்ள முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அதனைப் பாதுகாக்கவே, அவற்றை எங்களது ஆதரவாளர்கள் எடுத்து வந்து அவரது வாகனத்தில் வைத்தார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
எங்கள் புகாரில் நடவடிக்கை எடுங்க
நடந்த உண்மை இவ்வாறு இருக்க, எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என ஜேசிடி பிரபாகர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக நாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.சி.டி.பிரபாகர் மனுவில் கோரியுள்ளார்.
திருப்பிவிட்ட ஓபிஎஸ் டீம்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உள்துறை செயலாளர், டிஜிபி, ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த மனு மூலம், ஓபிஎஸ் தரப்பு, ஈபிஎஸ் ஆதரவாளர்களை நோக்கி, குற்றச்சாட்டுகளை திருப்பி விட்டுள்ளது. போலீஸ் தரப்பு கூறும் பதில் அடிப்படையில் ஈபிஎஸ் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.