ஆக்ஷனில் இறங்கிய பன்னீர் டீம்.. “லிஸ்ட் வேணும்”.. தேர்தல் அதிகாரியை சந்தித்து அதிரடி மூவ்!
சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அடுத்தடுத்த நகர்வுகளைச் செய்து வரும் ஓ.பன்னீர்செல்வம் அணி, இன்று சென்னையில் தமிழக துணை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை திருத்தும் பணிகளில் ஈடுபடுவதற்காக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பெயர் சேர்ப்பு நீக்க மற்றும் திருத்த பட்டியலை அனுப்புவது வழக்கம்.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக இருக்கும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மட்டும் அந்த பட்டியல் தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்று தேர்தல் அதிகாரியைச் சந்தித்து, தங்கள் அணிக்கு வாக்காளர் பெயர் சேர்ப்பு நீக்க மற்றும் திருத்த பட்டியலை அளிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரட்டை இலைக்கு ஆபத்து? டெல்லி காட்டிய சிக்னல்.. 7 பேரோடு போன எடப்பாடி.. 'திடீர் மீட்' பின்னணி இதானா?
ஓபிஎஸ் மூவ்
அதிமுக இரு பிரிவுகளாக இருந்து வரும் நிலையில், தனது நிலையை தக்கவைக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவே, கட்சி யார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும். இதற்கிடையே, கட்சியில் தனது உரிமையை நிலைநிறுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தில் சில மூவ்களைச் செய்து வருகிறார் ஓபிஎஸ்.
தலைமைக் கழகம் செல்லவில்லை.
கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு நடத்தியபோது ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது வன்முறை ஏற்பட்டு, அந்த ஏரியாவே களேபரமானதைத் தொடர்ந்து. அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி வசமே அலுவலக சாவி நீதிமன்றத்தால் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் செல்லாமலேயே இருந்து வருகின்றனர்.
தலைமை அலுவலகத்திற்கு
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிமுக அதிகாரப்பூர்வ முகவரியாக அந்த அலுவலகமே இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் தகவல் தொடர்புகள் அனைத்தும் அங்கேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அங்குதான் அழைப்பு அனுப்பப்பட்டது. அதையடுத்து ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகி தங்களுக்கும் அழைப்பு விடுக்க கேட்டுக்கொண்டு, பின்னர் கூட்டத்திலும் பங்கேற்றது.
சந்தித்த ஓபிஎஸ் டீம்
இந்த நிலையில் சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வந்திருந்தார். தலைமை தேர்தல் அதிகாரி டெல்லி சென்றுள்ளதால், துணை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் வரும் 26, 27, தேதிகளில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அன்றைய தினம் தங்கள் அணியினர் பணியாற்றும் வகையில் வாக்காளர் பெயர் சேர்ப்பு நீக்க மற்றும் திருத்த பட்டியலை ஓபிஎஸ் அணியினருக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தார்.
நாங்கள் அங்கு போவதில்லை
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தேர்தல் ஆணையம் அதிமுக தலைமை அலுவலகத்திற்க்கு மட்டும் வாக்காளர் திருத்த பட்டியலை அனுப்பியுள்ளது. அங்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக கூறுவதால் நாங்கள் செல்லவில்லை. ஆகவே எங்கள் அணியினருக்கும் தேர்தல் ஆணையம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் திருத்த பட்டியலை வழங்க வேண்டும் எனக் கோரி மனு அளித்ததாகத் தெரிவித்தார்.
ஆணை இல்லை
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் யாரும் செல்லக்கூடாது என எந்த ஆணையையும் யாரும் பிறப்பிக்கவில்லை. கடந்த முறை சாதாரணமாக சென்றதற்கு தங்களை அடிக்க வந்ததாக புகார் கொடுத்தனர். அவ்வாறு தேவையில்லாத பிரச்சனை வேண்டாம் என முடிவெடுத்திருப்பதன் காரணமாகவே அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தாங்கள் செல்லவில்லை என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
தீர்ப்பிற்குப் பிறகே
மேலும் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தை கொடுத்தது போல் பேசுகிறார்கள். அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அந்த தீர்ப்பு வந்தால் தான் எடப்பாடி பழனிசாமி நிலை என்ன ஆகும் என்பது தெரியவரும். நீதிமன்ற உத்தரவை பொறுத்தே எங்கள் தரப்பு, அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்.