தமிழ்நாட்டில் 19 வகை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.. நாளை கலந்தாய்வு
சென்னை : பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு இன்று தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில் கலந்தாய்வு நாளை தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு கல்லூரிகளில் மொத்தம் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 7,850 இடங்களும் பி.எஸ்.சி. நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்பும் பொருட்டு முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி., பி.எஸ்.சி. ரேடியோகிராபி, ரேடியோதெரபி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவ கல்வி இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ளது.
கல்வி உதவித் தொகையுடன் ரூ.400 விடுதிக் கட்டணம் - மாணவர்களுக்கு அரசு அறிவித்த சூப்பர் நியூஸ்
மருத்துவம் சார்ந்த படிப்புகள்
மருத்துவராகும் கனவோடு வரும் மாணவர்களுக்கு அந்த இடங்கள் கிடைக்கவில்லை எனில் பாரமெடிக்கல் எனும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த படிப்புகள் அனைத்தும் மருத்துவர்களுக்கு இணையான பணிகளை கொண்டவை. செவிலியர் முதல் மருந்தாளுநர் வரை அனைவரும் மருத்துவருக்கு இணையான பணிகளை செய்பவர்கள் என்றால் அது மிகையல்ல. நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து மருத்துவ இடங்கள் கிடைக்காதவர்கள் அதற்காக சோர்வுறாமல் மருத்துவம் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுக்க தொடங்கி விட்டனர்.
இயற்கை வைத்திய முறை படிப்புகள்
மருத்துவம் என்றாலே டாக்டர் என்பதை தாண்டி அதை சார்ந்த ஏராளமான படிப்புகள் பாராமெடிக்கல்லில் உள்ளன என்பது பல மாணவர்கள் அறியாத விஷயம். அதே சமயத்தில் அலோபதி மருத்துவர் மற்றும் பல் மருத்துவர் ஆக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, இயற்கை மருத்துவ படிப்புகளிலும் டாக்டராகி நோயாளிகளுக்கு சேவை செய்யலாம். ஆரம்பத்தில் இயற்கை மருத்துவத்திற்கு வரவேற்பு அதிகம் இல்லாத நிலையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் பெரும்பாலான மக்கள் சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருந்துகளை முழுமையாக நம்பத் தொடங்கி உள்ளனர். இதனால் இயற்கை சார்ந்த மருத்துவப் படிப்புகளுக்கும் தற்போது மவுசு கூடியுள்ளது.
மருத்துவம் சார்ந்த படிப்புகள்
பாராமெடிக்கலில் பி.பார்ம், பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, கிரிட்டிக்கல் கேர், ஆக்ஸிடென்ட் எமர்ஜென்சி கேர், ஆடியாலஜி அண்டு ஸ்பீச் லாங்வேஜ் பேத்தாலஜி, கார்டியாக், டயாலிசிஸ், நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி, லேப், மெடிக்கல் சோஷியாலஜி, நியூக்ளியர் மெடிக்கல், ஆபரேஷன் தியேட்டர் அண்டு அனஸ்தீஸியா, ஆப்தோமெட்ரி, ஆர்த்தோடிக்ஸ், ரேடியோகிராபி அண்டு இமேஜிங், ரேடியோ தெரபி, ரெஸ்பிரேட்டரி தெரபி, ஃபிட்னஸ் அண்டு லைஃப்ஸ்டைல் மாடிஃபிகேஷன், கிளினிக்கல் நியூட்ரீஷியன், மைக்ரோ பயாலஜி என மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் ஏராளமாக உள்ளன.
நர்சிங் படிப்பிற்கு நாளை கலந்தாய்வு
இந்நிலையில் தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பாரா மெடிக்கல் எனப்படும் மருத்துவம் சார்ந்த 19 படிப்புகளுக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,276 இடங்களும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 13,832 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்குவதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பி.எஸ்.சி. நர்சிங் படிப்பை பொறுத்தவரை அரசு கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 7,850 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு டிசம்பர் 23ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த படிப்புகளுக்கு மொத்தம் 13,882 இடங்கள் உள்ள நிலையில் 64,900 பேர் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவ இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும் கலந்தாய்வு குறித்த விவரங்களை மாணவர்கள் மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகியவற்றை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் வசந்தாமணி தெரிவித்தார்.